என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, October 17, 2009

மீனுக்கும் கற்பு உண்டு


" ரவணன் சார்... லைப்ரரி புக் கொண்டுவந்திருக்கேன்!" . எதிரே அழகுச் சிலையாக ரமா. காலேஜில் படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண். சரவணனிடம் அவளுக்கு அப்படி என்னதான் ஈர்ப்போ...லைப்ரரி புத்தகம் வாங்கிப் போகிற, பாடப் புத்தகத்தில் சந்தேகம் கேட்கிற சாக்கில் அடிக்கடி வீட்டுக்கு வந்து ஒட்டிப் பழகுகிறாள்.

ஆருயிர் மனைவி சித்ரா இறந்து ஒரு வருஷம் ஆகப் போகிறது. இதுவரை அவன் மனதில் எந்தவித சஞ்சலமும் வந்ததில்லை.ஆனால் சமீப காலமாக அவனுக்குள்ளும் சில மாற்றங்கள். அவனும் அதை உணராமல் இல்லை.

ன்று காலை... பாடத்தில் சந்தேகம் கேட்டு வந்த ரமா, கிளம்பிச் செல்கிற வேளையில் தயங்கி நின்றாள். "சார்...என் வாழ்க்கையை உங்களோடு இணைச்சுக்க விரும்பறேன். உங்களுக்குச் சம்மதமா?" என்று கேட்டவள், "அவசரமில்லை நல்லா யோசிச்சு...நாளைக்குச் சொன்னால் போதும், சார்!" என்று கிளம்பிப் போய் விட்டாள்.

அன்றைய தினம் முழுக்க, ஆபீஸ் வேலையில் சரவணனால் கவனம் செலுத்த முடியவில்லை. சின்ன கணக்குகூடத் தப்பாக வந்தது. சித்ரா இருந்த இடத்தில் இன்னொருத்தியா என்று யோசனையாக இருந்தது.

சாயந்திரம் டூ வீலரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது டயர் பஞ்சராகிவிட்டது. போன் செய்து மெக்கானிக்கை வரச் சொல்லிவிட்டு காத்திருந்தவனின் கண்களில் அந்த வண்ண மீன் விற்பனை நிலையம் பட்டது. உள்ளே நுழைந்து மீன்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் சரவணன். கோல்டு, ஏஞ்சல், ப்ளாக் மோலீஸ் எனவிதவிதமான மீன்கள் கண்ணாடித்தொட்டிகளில் நீந்திக் கொண்டு இருக்க, ஒரு மீன் மட்டும் எதனுடனும் சேராமல் தனியாக இருந்தது.

"அதுவா...அது ஆஸ்கர் மீன் சார்! அதன் ஜோடி ஆறு மாசத்துக்கு முந்தி செத்துப் போச்சு. இந்த வகை மீன் மட்டும் ஆண் இறந்து போனா பெண்ணும், பெண் இறந்து போனா ஆணும் வேறு எதோடும் சேராம, கடைசி வரைக்கும் தனியாகவே வாழ்ந்து செத்துப் போயிடும். மத்த பெண் மீன் இதோடு உரசுற மாதிரி வந்தாலும் இது ஒதுங்கிப் போயிடும். அவ்வளவு கற்புள்ள மீன் சார் இது!" என்றார் கடைக்காரர்.

அவனுக்குத் தெளிவு பிறந்த மாதிரி இருந்தது.

வீடு திரும்பியதும், ரமாவைக் கூப்பிட்டனுப்பினான் சரவணன். அவளிடம் அந்த ஆஸ்கர் மீன் பற்றிச் சொல்லி, "வாழ்க்கைத் துணை என்பது அந்த மீனுக்கே இவ்வளவு அழுத்தமான விஷயமாக இருக்கும்போது, ஆறறிவுள்ள நமக்கு மட்டும் அதுசாதாரண விஷயமா படலாமா? ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பண்பாட்டை மீறாம இருக்கறதுதான் மனித இனத்துக்கு அழகுன்னு நான் நினைக்கிறேன்" என்றான்.

"உங்க கண்ணியமும் பண்பாடும் உங்க மேலுள்ள என் மரியாதையை அதிகப்படுத்துது, சார்! ஆனா, நீங்க சொன்னதில் ஒரு சின்ன திருத்தம் . ஒருவனுக்கு ஒருத்தி என்பது வாழும்போது கடைப்பிடிக்க வேண்டிய அவசியமானதொரு கலாசாரம் தான். மத்தபடி தம்பதியில் ஒருவரது மறைவுக்குப் பின் அடுத்தவர் இன்னொரு திருமணம் பண்ணிக்கறது எந்தவிதத்திலும் மறைந்தவருக்குச் செய்யற துரோகமா நான் நினைக்கலை. மீனுக்குக் குடும்பம், குழந்தைகள் கிடையாது. ஆனா, மனைவி என்கிற ஒரு துணை உங்க வாழ்க்கைக்கும், தாய் என்கிற அரவணைப்பு உங்க மகள் சரண்யாவுக்கும் ரொம்ப முக்கியம் இல்லையா? எங்கோ விதிவிலக்கா இருக்கிறதை உதாரணமா எடுத்துக்காம, நம்ம அளவில் யோசிச்சு எடுக்கிற முடிவே சரியா இருக்கும்னு நான் நினைக்கிறேன், அதனால...'

" சரி உன் இஷ்டப்படியே ஆகட்டும்" என்றான் சரவணன். முன்பைவிட இப்போது இன்னும் தெளிவாகி இருந்தான்.


(31.1.07 இதழ் ஆனந்த விகடனில் வெளியான என் சிறுகதை)


வாழ்க வளமுடன்

15 comments:

  1. கருத்தையுணர்த்தும் சிறுகதை அப்போவே ஆனந்தவிகடன்லயா சரி அதுக்கு இப்போ பிலேட்டட் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்

    ReplyDelete
  2. அதான் கமலுக்கு ஆஸ்கர் கிடைக்கலியோ என்னவோ?
    ஹ ஹ ஹா....

    ReplyDelete
  3. அப்போவே படிச்சதுதான். இப்பவும் அருமையா இருக்கு! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. நச்சுனு இருக்கு எந்த முடிவுமே அந்தந்த சூழ்நிலையில மாறும்னு புரிய வைக்கிற குட்டிப் பாடம்

    ReplyDelete
  5. அப்ப ''வாழ மீனுக்கும் வாழ மீனுக்கும் கல்யாணம்...'' எல்லாம் சும்மா வெறும் பாட்டு இல்லே! _கே.பி.ஜனா

    ReplyDelete
  6. கயலுக்கும் உண்டு கற்பு! என்று போட்டிருக்கலாமே?

    ReplyDelete
  7. @@ பிரியமுடன்...வசந்த்
    @@ பழமைபேசி
    நன்றிங்க வந்ததுக்கும் கருத்துக்கும்

    @@ ரவிபிரகாஷ்
    இப்பவும் ரசித்ததற்கு நன்றி

    @@ ரிஷபன்
    நன்றிங்க உங்க கமெண்ட்டும் நச்னு இருக்கு.

    @@ K.B.JANARTHANAN
    ஆஸ்கர் மீனை பற்றி நான் எழுதியிருப்பது அவ்வளவும் உண்மை. நான் வேலை செய்த துறையில் ஆராய்ச்சியில் அனுபவம் வாய்ந்த ஒரு உயர் அதிகாரி சொன்ன விஷயத்தின் அடிப்படையில் உருவான கதை. நன்றிங்க.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  8. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  9. @@ கதிர் - ஈரோடு

    பாராட்டுக்கு நன்றி கதிர்.

    ரேகா ராகவன்

    ReplyDelete
  10. மிக அருமையாக இருந்தது. வார்த்தை பிரவாகங்கள் அருமை .

    ReplyDelete
  11. தங்களது சிறுகதை - மீனுக்கும் கற்பு உண்டு மிகவும் அருமை. மற்ற சிறுகதைகளையும் பதிவு செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன்
    --
    என்றென்றும் அன்புடன்


    வெங்கட்
    புது தில்லி

    ReplyDelete
  12. @@ யாழிசை
    @@வி. நா. வெங்கடராமன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  13. இதுக்கு பேரு தான் ட்விஸ்ட்டு!

    ReplyDelete
  14. ராகவன் சார்...

    கதையின் களமும், உங்கள் சொல்லின் வீச்சும் சரியாக இணைந்து கதையை பிரமாதப்படுத்தி விட்டன...

    சும்மாவா, ஆனந்த விகடன்ல பப்ளிஷ் பண்ணி இருக்காங்க...

    வாழ்த்துக்கள் சார்....

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "