என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 29, 2010

இன்னும் ஒரு ஸ்பூன்





"அப்பப்பா! என்ன ஒரு அலைச்சல்? மீனாட்சி சூடா காபி கொண்டு வா,'' என்றவாறே வந்தார் சபேசன்.


"வயசான காலத்தில் கிருஷ்ணா ராமான்னு வீட்டில் இருக்காம சோஷல் சர்வீஸ் அது இதுன்னு உடம்பை ஏன் இப்படி வருத்திக்கறீங்க? எனக்கும் வயசாச்சில்ல? உங்களுக்கு சிசுருஷை செய்ய இனிமே என்னால முடியாது; இந்தாங்க," என்று காபியை அவரிடம் நீட்டினாள் மீனாட்சி.


காபியை வாங்கிக் குடித்தவர் "சர்க்கரை இன்னும் கொஞ்சம் போடணும், அப்பத்தான் வயித்தில் இறங்கும்" என்றார்.


ஒரு வாரமாகவே இப்படித்தான். முந்தின வாரம் சபேசன் உடம்பை பரிசோதித்த டாக்டர் சர்க்கரையை குறைவா உபயோகிக்கணும் என்று பயமுறுத்தியிருந்தார். ஆனால் சர்க்கரை குறைவாக போட்டு காபி கலந்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி கலக்கிக் கொண்டுதான் குடிப்பார்.


இரவு மாட்டுப் பெண் பகுளா ஊரிலிருந்து வந்ததும் நடந்தது அத்தனையும் அவளிடம் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டாள் மீனாட்சி.


மறுநாள் காலை பகுளா கலந்த முதல் காபியை கேட்டு வாங்கிக் குடித்த சபேசன் "தூ!தூ! என்று துப்பாத குறை!


"என்னம்மா இது? சர்க்கரையே போடலியா?" என்று கேட்டார்.


"ஆமாம் மாமா! சர்க்கரை வாங்கி வைக்க அவர் மறந்துட்டார். மத்தியான காபிக்கு வாங்கி வந்துடறேன், இப்ப குடிங்க" என்றாள்.


வேண்டா வெறுப்பாக குடித்து வைத்தார் சபேசன்.


மத்தியான காபியையும் சர்க்கரை போடாமலேயே குடிக்க வேண்டியதாயிற்று. கடைக்கு போய் வாங்கி வர முடியாமல் அடை மழை.


மறு நாள் காலை மீனாட்சி கலந்து கொடுத்த காபியை எவ்வித குறையும் சொல்லாமல் குடித்தார் சபேசன்.


மீனாட்சிக்கு ஆச்சரியம். "என்னடீ இது? முந்தா நாள், இன்னிக்கிப் போலவேதான் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு காபி கொடுத்தேன். தாம் தூம்னு அமர்க்களம் பண்ணினார். ஒரே நாளில் அவரை எப்படி மாத்தினே?" என்று கேட்டாள்.


"அது வேறொன்னுமில்லை அத்தை, ரெண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டு குடிச்சவருக்கு ஒரு ஸ்பூன் போட்டு காபி குடிப்பதுன்னா ரொம்பக் கஷ்டமாய் இருக்கும். நேத்து பூரா சர்க்கரையே இல்லாம காபி குடிச்சார். இன்னிக்கு அரை ஸ்பூன் போட்டு குடிச்சாலும் அவருக்கு உலகளவுக்கு இனிக்கிறது" என்றாள் பகுளா.




(18.1.93 "மங்களம்" இதழில் வெளியான என் சிறுகதை)

13 comments:

  1. சூப்பர் டெக்னிக்.

    ReplyDelete
  2. சமயோசிதமான மருமகள் – பகுளா. வித்தியாசமான பெயர். இப்படி ஒரு வைத்தியம் தான் அவருக்குத் தேவை. கதைக்கேற்ற படமும் அருமை..

    ReplyDelete
  3. :)). நல்ல டெக்னிக் சார்.)

    ReplyDelete
  4. சர்க்கரை போட்டு டிகிரி காப்பி குடித்தது போல ஜிவ்வென்று ஒரு கதை. :-)

    ReplyDelete
  5. வயதானால் இப்படித்தான் காப்பி கிடைக்கும். கசப்பிலும் ஒரு இனிப்பு. நல்ல டெக்னிக்.

    ReplyDelete
  6. // (18.1.93 மங்களம் இதழில் வெளியான என் சிறுகதை) //

    அட... பழம்பெரும் எழுத்தாளரா நீங்கள்...

    ReplyDelete
  7. அட....

    இப்படி ஒரு டெக்னிக் இருக்கா!!!

    அசத்தலாக அவரை சமாளித்த அந்த குடும்பத்தார் பாராட்டுக்குறியவர்களே!!

    //philosophy prabhakaran said...
    // (18.1.93 மங்களம் இதழில் வெளியான என் சிறுகதை) //

    அட... பழம்பெரும் எழுத்தாளரா நீங்கள்..//

    **********

    நல்லா கேக்கறான்யா டீடெயிலு....

    ReplyDelete
  8. மாட்டுப் பெண் பகுளா ரொம்ப சமத்து தான்.

    ReplyDelete
  9. இப்படித்தான் சமாளிக்கணும்.. சமர்த்தா..

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "