என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, February 25, 2010

போதிக் கண்

"வாசனை ஊதுவத்தி, நறுமண சாம்பிராணி வாங்கிக்குங்க சார்."

சம்பள நாள் அன்று குருடன் ஒருவன் அலுவலகத்தில் நுழைந்து விற்றுக் கொண்டிருந்தான்.

"ஏம்பா, யார் அவனை உள்ளே விட்டது?" கத்தினேன் நான்.

"ஹெட் கிளார்க் சார்! இரண்டு கண்ணும் தெரியாத குருடன் அவன். பிச்சை எடுக்காம ஏதோ வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். கண்டுக்காம போங்க சார்" என்று டைபிஸ்ட் ஏகாம்பரம் கூறினான்.

எம்.டி. இன்ஸ்பெக் ஷன் . எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

"சார், உங்களை அந்த ஒர்க்ஸ் பைலை எடுத்துக்கொண்டு வரச் சொன்னார் எம்.டி." ஆபிஸ் பையன் வந்து சொல்லவும் மயக்கம் வராத குறைதான் எனக்கு. என்ன கேட்கப் போகிறாரோ?"

"என்ன மிஸ்டர் இது? முக்கியமான பைலில் இங்க்கை கொட்டி வச்சிருக்கீங்க? இதுதான் நீங்க செய்யற வேலையின் லட்சணமா?"

"சார்... அவசரத்தில் கை தவறி.. கொட்டி... சாரி சார்... இனிமே... " வாய் குழறியது எனக்கு.

"லுக் மிஸ்டர், அவசரத்திலும் ஒரு நிதானம் இருக்கணும். ரயில்ல, பஸ்ல லாட்டரி டிக்கட், ஊதுவத்தி,பிளாஸ்டிக் கவர்னு விக்கற குருடர்களிடம் ரூபா நோட்டை நீட்டினா அதை இரண்டா மடிச்சு உள்ளங்கையில் வச்சு சைஸ்
பார்த்து எவ்வளவு ரூபான்னு தீர்மானிச்சு மீதி சில்லறையை சரியா எண்ணிக் கொடுத்து வியாபாரம் பண்றதை பார்த்திருக்கீங்களா? பார்வை இல்லாமலிருந்தும் நிதானமா நடந்துக்கற அவங்க உசத்தியா? இரண்டு கண்கள் இருந்தும் நிதானமில்லாம நடந்துக்கற நீங்க உசத்தியான்னு நல்லா யோசிச்சுப் பாருங்க" -- எம்.டி.கூறவும்,

போன மாதம் ஊதுவத்தி விற்க வந்த அந்த குருட்டு இளைஞன் முகம் நினைவுக்கு வர, "இனிமே நிதானமா நடந்துக்கறேன் சார்" என்றேன் இருவருக்குமாகச் சேர்த்து.

( "குங்குமம்" 10.12.99 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

மென்மையாக நடந்து கொள்ளுங்கள். துணிவுடன் இருப்பது சாத்தியமாகும்

8 comments:

  1. நிதானம் தப்பினால் என்ன ஆகும்.. புரிய வைத்தது..

    ReplyDelete
  2. வாழ்க்கையில் நிதானமும், மிதமான வேகமும் தேவை என்பதை அழகாக உணர்த்திய கதை...

    ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சார்..

    வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  3. நல்ல கதை சார் .செய்யும் தொழிலே தெய்வம் .

    ReplyDelete
  4. எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் , பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நிதானத்தை கடைபிடித்தால் அங்கு துன்பத்திற்கு இடமேது?

    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "