என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, November 4, 2011

போதிக் கண்



"வாசனை ஊதுவத்தி, நறு மண சாம்பிராணி வாங்கிக்குங்க சார்."

சம்பள நாள் அன்று பார்வை இழந்தவன் ஒருவன் அலுவலகத்தில் நுழைந்து விற்றுக் கொண்டிருந்தான்.

"ஏம்பா, யார் அவனை உள்ளே விட்டது?" கத்தினேன் நான்.

"ஹெட்கிளார்க்   சார்! இரண்டு கண்ணும் தெரியாதவன் அவன். பிச்சை எடுக்காம ஏதோ வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். கண்டுக்காம போங்க சார்" என்று டைபிஸ்ட் ஏகாம்பரம் கூறினான்.

எம்.டி, இன்ஸ் பெக்ஷன். எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

"சார், உங்களை அந்த ஒர்க்ஸ் பைலை எடுத்துக்கொண்டு வரச் சொன்னார் எம்.டி." ஆபீஸ் பையன் வந்து சொல்லவும் மயக்கம் வராத குறைதான் எனக்கு.  என்ன கேட்கப் போகிறாரோ?"

"என்ன மிஸ்டர் இது? முக்கிய பைலில் இங்க்கை கொட்டி வச்சிருக்கீங்க? இதுதான் நீங்க செய்யற வேலையின் லட்சணமா?'

"சார்...அவசரத்தில் கை தவறி...கொட்டி... சாரி சார்...இனிமே..." வாய் குழறியது எனக்கு.

"லுக் மிஸ்டர், அவசரத்திலும் ஒரு நிதானம் இருக்கணும். ரயில்ல,பஸ்ல லாட்டரி டிக்கட்,ஊதுவத்தி, பிளாஸ்டிக் கவர்ன்னு விக்கற பார்வை இழந்தவர்களிடம் ரூபா நோட்டை நீட்டினா அதை இரண்டா மடிச்சு உள்ளங்கையில் வச்சு சைஸ் பார்த்து எவ்வளவு ரூபான்னு தீர்மானிச்சு மீதி சில்லறையை சரியா எண்ணிக் கொடுத்து வியாபாரம் பண்றதை  பார்த்திருக்கீங்களா? பார்வை இல்லாமலிருந்தும் நிதானமா நடந்துக்கற அவங்க உசத்தியா? இரண்டு கண்கள் இருந்தும் நிதானமில்லாம நடந்துக்கற நீங்க உசத்தியான்னு நல்லா யோசிச்சுப் பாருங்க" எம்.டி.கூறவும்,

போன மாதம் ஊதுவத்தி, விற்க வந்த அந்த பார்வை இழந்த இளைஞன் முகம் நினைவுக்கு வர, "இனிமே நிதானமா நடந்துக்கறேன் சார்" என்றேன் இருவருக்குமாகச் சேர்த்து. 

("குங்குமம்" 10.12.1999 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)




10 comments:

  1. நல்ல பாடம் கற்பித்த சிறுகதை... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. @ வெங்கட் நாகராஜ்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. //,ஊதுவத்தி, பிளாஸ்டிக் கவர்ன்னு விக்கற பார்வை இழந்தவர்களிடம் ரூபா நோட்டை நீட்டினா அதை இரண்டா மடிச்சு உள்ளங்கையில் வச்சு சைஸ் பார்த்து எவ்வளவு ரூபான்னு தீர்மானிச்சு மீதி சில்லறையை சரியா எண்ணிக் கொடுத்து வியாபாரம் பண்றதை பார்த்திருக்கீங்களா? பார்வை இல்லாமலிருந்தும் நிதானமா நடந்துக்கற அவங்க உசத்தியா? இரண்டு கண்கள் இருந்தும் நிதானமில்லாம நடந்துக்கற நீங்க உசத்தியான்னு நல்லா யோசிச்சுப் பாருங்க" எம்.டி.கூறவும்,
    /////

    நெத்தியடி...நல்ல கதை ரேகா ராகவன்

    ReplyDelete
  4. நல்ல பாயின்ட்! நல்ல கதை!

    ReplyDelete
  5. நல்ல சிறுகதை, நீங்கள் எழுதியதா?

    ReplyDelete
  6. இதை கதை என்று சொல்லக்கூடாது... ஒவ்வொருக்கும் தேவையான கருத்து... வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. @ ஷைலஜா
    @ கே. பி. ஜனா...
    @ குடந்தை அன்புமணி

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. @ நம்பிக்கைபாண்டியன்
    //நல்ல சிறுகதை, நீங்கள் எழுதியதா?//

    இந்த ப்ளாக்கில் வெளியிடப்படும் அனைத்தும் பத்திரிகைகளில் வெளியான என் சிறுகதைகளே. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  9. போன மாதம் ஊதுவத்தி, விற்க வந்த அந்த பார்வை இழந்த இளைஞன் முகம் நினைவுக்கு வர, "இனிமே நிதானமா நடந்துக்கறேன் சார்" என்றேன் இருவருக்குமாகச் சேர்த்து. /

    பதிவல்ல ..பாடம்..

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "