என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 18, 2011

ஓலி




"பிரபல தொழிலதிபர் ஆதிமூலம் படுகொலை!" சன் நியூஸ் சேனலில் பிளாஷ் மின்னியது.

'பூஜை ரூமில் இருந்தவரை வெட்டிச் சாய்த்த கூலிப் படையின் வெறிச் செயல்! ' என்று அடுத்தடுத்து காட்டி பரபரப்பை கூட்டினார்கள்.

அடுத்த அரை மணியில் கை ரேகை நிபுணர்கள், மோப்ப நாய் என்று போலீஸ் பட்டாளமே அவர் வீட்டில் ஆஜாராகி விசாரணையை முடுக்கிவிடப்பட்டது.

உடலை ஆம்புலன்சில் அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் அன்புச் செல்வன் அந்த வீட்டிலிருந்த வேலைக்காரனை விசாரித்தார்.

"அம்மாவும் குழந்தைகளும் நேத்துதான் சொந்த ஊருக்கு புறப்பட்டுப் போனாங்க. ஐயா மட்டும்தான் வீட்டில் இருக்காருன்னு தெரிஞ்சிகிட்டு பின் பக்கமா வீட்டுக்குள் நுழைஞ்சிருக்காங்க . தினமும் குளிச்சிட்டு அரை மணி நேரம் பூஜை ரூமில் இருப்பாரு.டேப்பில் பக்திப் பாடல் ஓடிக்கிட்டிருக்கும். அது முடிஞ்சதும் கற்பூரம் காட்டி சாமி கும்பிட்டுட்டுத்தான் அடுத்த வேலையை கவனிப்பாரு. அவரை இப்படி வெட்டி சாய்ச்சுட்டாங்களே ! "-- அழுதுகொண்டே கூறிய அவன் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் .

பூஜை அறையை ஒரு முறை தன் கண்களால் அளந்தார் அன்புச் செல்வன். முருகன் படத்தின் கீழே அர்ச்சனை செய்த பூக்கள் குவிந்திருக்க அதன் பக்கத்திலிருந்த டேப் ரெக்கார்டரை சோதித்த போது அது ஓடி முடிந்து ஆட்டோ ஸ்டாப் ஆகியிருந்தது. எடுத்து பத்திரப்படுத்தினார்.

மறுநாள் காலை ...

"கொலை செஞ்சவங்களை எப்படிய்யா நாலு மணி நேரத்தில் பிடிச்சிட்டே?" டி.எஸ்.பி. கேட்க...
டேப் ரெக்கார்டரை ஆன் பண்ணினார் இன்ஸ்பெக்டர். சூலமங்கலம் சகோதரிகளின் கணீர் குரலில் பாடல் ஆரம்பித்தது.

" இது எதுக்குய்யா இப்போ ? "

" பொறுத்திருந்து பாருங்க... "

ஓரிடத்தில் பாடல் நிற்க, பேச்சுக்குரல்கள்..

" ஏண்டா ராமசாமிக்கு போட்டியா இந்த ஊர்ல ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணா நாங்க விட்ருவோமா? வெட்றா இவனை! " யாரோ ஒருவன் கத்துகிறான்.தொடர்ந்து, "ஐயோ! ஐயோ!'' என்று ஆதிமூலத்தின் அலறல்.

பரபரப்பானார் டி.எஸ்.பி. "அட, கரெக்டா இதை யாருய்யா ரெகார்ட் பண்ணது?''

" அதை இவன் வாயாலேயே சொல்லட்டும்! " என்று பக்கத்தில் நின்ற கொலைகாரனை கை காட்டினார் அன்புச் செல்வன்.

"அவரை வெட்டறப்போ அவரு போடற சத்தம் வெளியே கேக்கக் கூடாதுன்னு நான்தான் டேப் வால்யூமை கூட்டச் சொன்னேன். இந்த நாதாரிப்பயல் பட்டுன்னு ஏதோ ஒரு பட்டனை அழுத்தித் தொலைச்சிட்டான். ஒரேயடியா சைலண்ட் ஆகிடுச்சு. என்னா ஏதுன்னு பார்க்க நேரமில்லே. வந்த வேலைய முடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டோம். இவன் அழுத்தினது ரெகார்ட் பட்டன்னு இப்பதான் தெரியுது.''

(18.7.2011 "குங்குமம்" இதழில் வெளியான என் 2 பக்கக் கதை)

13 comments:

  1. அட...

    என்ன சார் க்ரைம் கதை கூட சூப்பரா எழுதி இருக்கீங்க...(ராஜேஷ்குமார் ஸ்டைல்ல...)..

    கலக்கல் கதை...

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு.....

    ReplyDelete
  3. கலக்கல் கதை சார் ;)

    ReplyDelete
  4. கதைப்போக்கு நன்கு உள்ளது. தொடருங்கள்.

    ReplyDelete
  5. மனசுல ரெகார்ட் ஆயிருச்சு உங்க கிரைம் ஸ்டைல்

    ReplyDelete
  6. ஒரு ரெக்கார்ட் மூலம் அவனது கிரைம் ரெகார்டு துவங்கிவிட்டதே போலீஸ் ஸ்டேஷனில்....:) நல்ல கிரைம் சிறுகதை...

    ReplyDelete
  7. தவறுகள் செய்பவர்கள் அவர்களுக்கு தெரியாமலே தடயம் விட்டு செல்வார்கள் என்பதை சுட்டிகாட்டியுள்ளீர்கள் .. தொடருங்கள்

    ReplyDelete
  8. இன்றைய வலைச்சரத்தில் தங்களது வலைதளத்தைப் பகிர்ந்துள்ளேன்.

    நேரமிருந்தால் வருகை தரவும்.

    http://blogintamil.blogspot.com/2011/08/5.html

    ReplyDelete
  9. புத்திசாலி.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete
  11. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பரபரப்பான நடை. வாழ்த்துகள்.
    vallisimhan

    ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "