சமீபத்தில் ஒரு திருமணத்துக்கு போயிருந்தேன். அறுசுவையான சாப்பாடை உண்டு மகிழ்ந்ததும் உடனே சமையல் கட்டுக்கு போய் சமையல் செய்த கைகளை பிடித்துக் (குறிப்பாக அந்த ரசம் ஆஹா ! என்ன ருசி! ) குலுக்கி பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. அடுத்த நிமிடம் அங்கே ஆஜர்.
அங்கே நான் கண்ட காட்சி.
சமையல்காரர் ஒரு சின்ன இலையில் தயிர் சாதத்தை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். " எங்களுக்கெல்லாம் அறுசுவை உணவை படைத்துவிட்டு நீங்கள் வெறும் தயிர் சாதம் மட்டும் சாப்பிடறீங்களே, ஏன் சார்?" என்று கேட்டதும், "அதுவா சமையல் செய்யும் போது அதிலிருந்து கிளம்பும் வாசனை நாசிக்குள் புகுந்து வயிறை அடைச்சிடுதா, அதான் வெறும் தயிர் சாதம் தான் சாப்பிட பிடிக்குது " என்றார் (ஓஹோ அதான் சமையல் செய்யும் பெண்கள் தன் சமையலை தானே சாப்பிட பிடிக்காமல் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லுமாறு கணவர்களை நச்சரிக்கிறாங்களோ? ) . அவரின் சமையலை பாராட்டிவிட்டு அவரிடம் இந்த சூப்பர் ரசம் எப்படீங்க செய்வது என்று கேட்டேன். ரசத்துக்கு போடும் பொடியில் தான் இருக்கு அந்த ருசி என்றார். அவரிடம் கேட்டு அறிந்து கொண்ட ரசப் பொடி செய்முறை கீழே:
ரசப்பொடி:
தேவையான பொருள்கள்
துவரம் பருப்பு : 1/2 கிலோ
மிளகு : 250 கிராம்
சீரகம் : 200 கிராம்
பெருங்காயம் : 100 கிராம்
மிளகாய் வத்தல் : 300 கிராம்
தனியா : 3/4 கிலோ
மஞ்சள் பொடி : 50 கிராம்
கறிவேப்பிலை : 1 கைப்பிடி
செய்முறை : வாணலியை அடுப்பில் வைத்து முதலில் மிளகை லேசாக வறுக்கவும். பின்னர் துவரம் பருப்பு. அது லேசாக வறுபட்டதும் மிளகாய் வத்தலை கிள்ளிப் போட்டு விடுங்கள். தனியாவை சேருங்கள் . அதன் பின் கறிவேப்பிலை. பிறகு கடைசியாக சீரகம் போட்டு வறுத்து விடுங்கள். பெருங்காயத்தை பொடித்து எடுத்து வைத்திருந்து (சூடான வெறும் வாணலியில் கெட்டி பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி போட்டு பொறித்து எடுத்துக்கொண்டு) இந்த கலவையில் போட வேண்டும். இதை மிக்ஸ்சியில் சின்ன ரவை பதத்துக்கு அரைத்து எடுத்துக் கொண்டு பிறகு மஞ்சள் பொடியை நன்றாக கலந்து விடுங்கள். 4 டம்ளர் தக்காளி அல்லது பருப்பு ரசத்துக்கு இந்த ரசப்பொடி 1-1/2 ஸ்பூன் போட வேண்டும்.
என்ன உங்கள் வீட்டிலும் இனி ஆஹா ரசம் தானே!