என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.
Showing posts with label தினமலர் கதைமலர். Show all posts
Showing posts with label தினமலர் கதைமலர். Show all posts

Friday, December 3, 2010

விஷம் ரெடியா?



"ஏய் மீனா! கதவை தாழ்ப்பாள் போட்டியா?"


"போட்டுட்டேங்க!"

"பசங்களெல்லாம் தூங்கியாச்சா? எழுந்து வரமாட்டாங்களே?"

"நல்லா அயர்ந்து தூங்கறாங்க, இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டாங்க!"







''ஆமா, சாயங்காலமே லெட்டர் எழுதி வைக்கச் சொன்னேனே, எழுதிட்டியா?"

"எழுதி டேபிள் மேலே வச்சிருக்கேங்க."

"சரி,சரி! விஷத்தை வாங்கியாந்து அந்த ஷெல்ப்பில் வச்சிருக்கேன். பார்த்து எடுத்துக்கிட்டு வா! பசங்க காலை மிதிச்சிடப் போறே, அதுங்க எழுந்து கிழுந்து வைக்கப் போவுது!"

"கொண்டாந்துட்டேன்..இந்தாங்க!"

"இப்படிக் கொடு, அந்தத் தட்டில் சோத்தைப் போடு, விஷத்தைக் கலந்துடலாம்."

"இந்தாங்க..சோறு கொஞ்சம் போதுமா, இல்ல நிறைய போடணுமா?"

"கொஞ்சம் போதும். அப்பத்தான் நல்லா வேலை செய்யும். "

"சோத்துல விஷத்தைக் கலந்துட்டேன். இந்தா நீ பாதி எடுத்துக்க, கொஞ்சம் கொஞ்சமா உள்ளே தள்ளு."

"சரிங்க, அப்படியே செய்யறேங்க."

"அப்பாடா! இன்றோடு எல்லாத் தொல்லையும் விட்டது. பொந்துக்குள்ள தள்ளின விஷ சோத்தை தின்னுட்டு எல்லா எலிகளும் வாயைப் பொளந்துகிட்டு செத்துக் கிடக்கப் போவுது பார். நீ எழுதி வச்ச லெட்டரை மறக்காம நாளைக்கு போஸ்ட் பண்ணிடு. எலிக்கு பயந்து சாகும் உன் தங்கச்சி, அதை எல்லாம் விஷம் வெச்சு சாகடிச்சாச்சுன்னு தெரிஞ்சதும் அடுத்த பஸ்சிலேயே புறப்பட்டு வந்துடுவா! என்ன நான்
சொன்னது புரிஞ்சுதா?"

"புரிஞ்சுதுங்க," என்றாள்.
_____________________________________________________________

(30.6.92 தினமலர் கதைமலரில் வெளியான என் சிறுகதை)

Monday, November 22, 2010

புதிரான ஊர்மிளா


"ஆனாலும் அந்த ஊர்மிளாவுக்கு ரொம்பத்தான் திமிர்! பாரேன்! நாங்க ரெண்டு பேரும் ஒரே தெருவில்தானே இருக்கோம்? நேற்று மாலை ஆசை ஆசையாய் அவ வீட்டுக்குப் போய் கோயிலுக்கு போகலாம்,ஒருத்தருக்கொருத்தர் துணையாச்சேன்னு கூப்பிட்டேன். உடனே மூஞ்சில அடிச்ச மாதிரி நிறைய படிக்கணும் உன்னோட வரமுடியாதுன்னுட்டா!" என்றாள் காயத்ரி.

"கரெக்ட் காயத்ரி! கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாத ஜன்மம் !" என்றாள் ராதா.

"இரண்டு பேரும் சரியா சொன்னீங்க! மஞ்சு கல்யாணம் நடந்ததே, அன்னிக்கும் அப்படித்தான். சாயங்காலம் ரிசப்ஷனுக்கு போகலாம்னு கூப்பிட்டேன். முதலில் சரின்னு சொன்ன அவளை நம்பி ஆறரை மணி வரை வீட்டில் காத்திருந்துவிட்டு ஏமாந்து போனேன். அப்புறமா பஸ்சை பிடிச்சு நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு கல்யாண சத்திரத்துக்குப் போனா எனக்கு பத்தடி முன்னே அந்த கனகாவோட பேசிட்டிருக்கா! நமக்கென்ன அழகில்லையா?அறிவில்லையா? நம்மோட வர கசக்கிற அவளுக்கு அந்த கனகாவோட மட்டும் போக இனிக்கிறதா? என்னிக்காவது அவ நம்மகிட்ட வராமலா போகப் போறா? அப்பா காட்டலாம் நம்ம வேலையை. பஸ் வருது, சீக்கிரம் வாங்க போகலாம்!" என்றாள் மீனா.

"ஏண்டி ஊர்மிளா, அந்த காயத்ரி உன்னை கோயிலுக்கு வரச்சொல்லி கூப்பிட்டாளாமே! நீ வர முடியாதுன்னுட்டியாமே! அவ அம்மா என்னை ரேஷன் கடையில் பார்த்து சொன்னா. ஏன் அப்படிச் சொன்னே? அவளோட போறேன்னா நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்?" என்றாள் அம்மா.

"போம்மா, உனக்கு ஒண்ணும் தெரியாது! அந்த ராதா, மீனா, காயத்ரி எல்லாம் என்னைவிட அழகானவங்க. அவங்களோட நான் வெளியில் போனா என்னோட அழகு எடுபடாது. அதான் என்னைவிட அழகில் குறைந்த கனகாவோட எங்கேயும் போறேன்,வரேன். போற இடத்தில் எல்லாரும் என்னை பார்க்கறாங்க, என் அழகைப் பத்தி பேசறாங்க. அவங்களோட போனா என்னை யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டாங்க. ஹும்! உனக்கு எங்கே இதெல்லாம் புரியப் போறது?" என்றாள் ஊர்மிளா தன் அம்மாவிடம்.

(7.11.90 தினமலர் கதைமலரில் வெளியான என் சிறுகதை)