என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Thursday, May 13, 2010

சம்பாத்தியம்


பஸ் ஸ்டாண்டின் எதிரிலிருந்த அந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ருசி கண்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட வருவதால்தான் அப்படி. ஓட்டலுக்குள் புகுந்த சரவணன் அவனின் அப்பா அங்கு சமையல்காரராக வேலை பார்ப்பதால் நேராக சமையலறைக்குள் சென்றான்.


பொள்ளாச்சிக்கு பக்கத்தில் உள்ள ப.க.புதூர்தான் அவன் சொந்த ஊர்.தென்னந்தோப்பு வைத்திருந்த அவனின் அப்பா மாசிலாமணி அவருடன் கூடப் பிறந்த நான்கு பெண்களையும் கரை சேர்ப்பதுக்குள் எல்லாவற்றையும் விற்றாக வேண்டியதாகிவிட்டது. குடும்பத்தை காப்பாற்ற அந்த ஓட்டலில் சமையல்காரருக்கு உதவியாளனாக வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று அந்த ஓட்டலின் சீஃப் குக் ஆக இருந்தார்.


ஒவ்வொரு மாதமும் சம்பள நாள் அன்று மாலை சரவணனை ஓட்டலுக்கு வரச்சொல்லிவிடுவார்.


அன்று சம்பள நாள் என்பதால் வழக்கம் போல சரவணனும் ஓட்டலுக்கு போய் சமையல் அறைக்குள் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் தோசைக் கல்லில் சாதா, ரவை, ஆனியன் என்று ஆர்டர்களுக்கு தகுந்தபடி வார்த்துக்கொண்டு மறு பக்கம் இட்லி போணியிலிருந்து ஆவி பறக்கும் இட்லிகளை எடுத்துத் தட்டில் கவிழ்த்துக் கொண்டிருந்தார் அவனின் அப்பா. இடையிடையே அடுத்த நாள் காலை தயாராகவேண்டிய ஸ்பெஷல் ஆர்டருக்கு தேவையான சாமான்களுக்கான லிஸ்டை அவரின் உதவியாளருக்கு சொல்லிக்கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டிருந்த சரவணனால் இருக்க முடியவில்லை. பாவம் என்னை படிக்க வைப்பதுக்காக அப்பா இப்படி நெருப்பில் வேகிறாரே என்று நினைத்துக்கொண்டு முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பது போலிருந்தான் .


இரவு எட்டு மணி ஆகவும் சரவணனை அழைத்துக்கொண்டு கல்லாவிலிருந்த முதலாளியிடம் போய் " அய்யா சம்பளத்தை கொடுத்தீங்கன்னா இவனை அனுப்பிச்சுடுவேன், அப்புறம் எங்க கிராமத்துக்கு பஸ் கிடையாது" என்றார் மாசிலாமணி.


" இவன் இந்த வருஷம் இன்ஜினியரிங் காலேஜில் சேரப்போறான் இல்லே? நீ கேட்டிருந்த அட்வான்ஸ் பணம் பத்தாயிரமும் தர்றேன். ஆனா லீவு போடாம வேலை செய்யணும் புரிஞ்சுதா ? " என்று சொல்லியவாறே பணத்தை எடுத்துக் கொடுத்தார்.


பணத்தை வாங்கி சரவணனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு "ரொம்ப நன்றிங்க முதலாளி" என்றார் .


" இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன். ஓவ்வொரு மாசமும் உன் பையனை இங்க வரவைச்சு சம்பளப்பணத்தை கொடுத்தனுப்பணுமா? ஒரு நடை கிராமத்துக்கு போய் உன் பொண்டாட்டிகிட்டே கொடுத்துட்டு வந்தாத்தான் என்ன? " என்று கேட்ட முதலாளியிடம் ...


"நான் படும் கஷ்டம் என் மகன் படக்கூடாதுங்கறதில நான் உறுதியா இருந்தாலும் அவனை பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க நான் விரும்பலை. நான் கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கிறேன் என்பதை அவனும் உணரணும்கிறதுக்காகத்தான் ஓவ்வொரு மாசமும் சம்பள நாள் அன்று அவனை வரச்சொல்லி சமயலறையில் காக்க வச்சு நான் படற கஷ்டங்களை நேரடியா பார்க்க வைக்கிறதுனால அவனும் அதை உணர்ந்து பொறுப்பா நடந்துகிட்டு நல்லா படிச்சுமுதல் ரேங்க் வாங்கறான் அய்யா" என்றார்.


" நீ ரொம்ப படிக்கலை என்றாலும் வாழ்க்கையை நல்லாவே படிச்சு வச்சிருக்கேய்யா " என்ற முதலாளியை நெகிழ்ச்சியுடன் பார்த்தார் மாசிலாமணி.

-ரேகா ராகவன்.

தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!

Thursday, April 22, 2010

நம்பிக்கை



தினமும் வெளியே புறப்படும்போது தெரு முனை பிள்ளையார் கோயில் முன் காரை நிறுத்தி இறங்கி தரிசித்துவிட்டு செல்வது வழக்கம். "நீயும் வாயேண்டா! என்று காரிலிருந்த என் நண்பன் கார்த்திக்கை கூப்பிட்டேன். அவனோ "இல்லடா நீ போயிட்டு வா ! " என்றான்.

தரிசனம் முடித்து மீண்டும் காரை எடுத்தேன். பாதி வழி போகவில்லை. "நிறுத்து நிறுத்து " என்றான். என்ன ஏது என்று பார்த்தால் நடைபாதையிலிருந்த கிளி ஜோஸ்யரிடம் போய் உட்கார்ந்திருந்தான்.

மனைவி, மகன், மகள்னு ஒவ்வொருத்தரா சொல்லி கடைசியில் அவன் பெயரையும் சொல்லி ஜோஸ்யம் கேட்டுவிட்டுத்தான் காருக்குத் திரும்பினான்.

எனக்கு பொறுக்கவில்லை. "ஏண்டா கைரேகை, நியூமராலஜி, வாஸ்துன்னு என்னவெல்லாமோ இருக்குதே! அதையெல்லாம் விட்டுட்டு போயும் போயும் கிளி ஜோஸ்யம் பார்க்கறயே! "என்று கேட்டேன்.

" போடா எங்க நாலு பேருக்குமான பலன்களை வரிசையா சொல்ல சீட்டை எடுக்கறதுக்காக அந்த ஜோஸ்யக்காரன் கிளியை இருபது நிமிஷம் வெளியே சுதந்திரமா இருக்க விட்டானில்லே" அதுக்காகத்தாண்டா என்றான்.

நண்பர்கள் பட்டியலில் அவன் மிகவும் உயர்ந்தவனாக தெரிந்தான்.


அன்பை எப்போதும் ரகசியமாக வைத்திருக்காதீர்கள். ஒவ்வொரு முறையும் நல்ல நல்ல செயல்கள் மூலம் அதை வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள்

Saturday, April 10, 2010

யார் அழகு?




கபாலீஸ்வரர் கோவில்.

பிரதோஷ பூஜை தரிசித்து கோயில் பிரகாரத்தை மஞ்சள் நிற சுடிதாரில் கமலாவும்
ஆரஞ்சு சுடிதாரில் வைதேகியும் வலம் வந்துகொண்டிருந்தனர் .

அதற்கு ஒரு காரணம் இருந்தது.

முதல் நாள் தான் முடிந்திருந்தன கமலாவின் காலேஜ் தேர்வுகள். அரியர்ஸ் இல்லாமல் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெறணும் என்று வேண்டிக் கொள்வதற்காகவும் இருவரில் யார் அழகுன்னு வைதேகிக்கு புரிய வைக்கவும் பக்கத்து வீட்டு வைதேகியையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தாள் அவள்.
இரண்டாவது சுற்று வந்துகொண்டிருக்கும்போதுதான் முன்னே சென்று கொண்டிருந்த மாமி அவள் பெண்ணிடம் " பின்னாடி மஞ்சள் சுடிதாரில் வர்றவ அழகா இருக்கா இல்லே?" என்று கேட்க, அவளுடைய பெண் திரும்பி பார்த்துவிட்டு " போம்மா உனக்கு ரசனையே இல்லே. அவளை விட அவள் பக்கத்தில் ஆரஞ்சு சுடிதாரில் வர்ற பொண்ணுதாம்மா நகை எதுவும் போட்டுக்காமலேயே களையா கண்ணுக்கு லட்சணமா இருக்கா " என்றாள்.

" பார்த்தியாடி! நான் ஏழை, போட்டுக்க நகைநட்டுன்னு ஒண்ணும் இல்லே, அதான் யாருமே வராத நேரம் பார்த்து கோவிலுக்கு போயிட்டு வருவேன்னியே? நகைக்கடையா வந்திருக்கிற என்னை விட நீ தான் அழகுன்னு சொன்னதை இப்ப உன் காதால கேட்டே இல்ல? உன் தாழ்வு மனப்பான்மையை இனிமேலாவது மூட்டை கட்டி வெச்சுட்டு வாழக் கத்துக்கோ! " என்று கமலா கூறவும் ...

மூன்றாவது சுற்றை சந்தோஷமாக வலம் வந்தாள் வைதேகி.


Monday, November 2, 2009

புகை


அடுப்பை ஊதி விட்டாள் மேகலை. புகை இன்னும் அதிகமானதே தவிர விறகு எரிவேனா
என்று அடம் பிடித்தது. விறகில் பொதிந்திருந்த ஈரம் புகையை மேலும் மேலும் அடர்த்தியாக்கியது.

"ஐந்து ரூபா அதிகமா செலவழிக்க முடிஞ்சிருஞ்சா நல்ல விறகா வாங்கியாந்திருக்கலாம், நல்லா எரிஞ்சிருக்கும்" -- தன் நிலையை நொந்து கொண்டே விறகை சரி செய்தாள்.

ரோடு போடற கூலி வேலைக்குப் போய், கமிஷனை எடுத்துக் கொண்டு மேஸ்திரி தரும் ரூபாயில் அரிசி பருப்புன்னு சகலமும் அவள் வாங்கியாக வேண்டும்.

அவள் புருஷன் மாரியோ ஒரு நாள் வேலைக்குப் போனால் பத்து நாள் போகமாட்டான்.

களைத்து வீடு திரும்பும் மேகலையை வழியிலேயே மடக்கி கூலிப் பணத்தில் பாதியை
பிடுங்கிக் கொண்டு போய் குடித்து விட்டு வருவான். வீட்டிலேயே முடங்கிக் கிடப்பான்.


அடுப்பு இன்னும் அதிகமாக புகையை கக்க, ஊதி ஊதி அவளின் கண்கள் இரண்டும் சிவந்து
மூச்சு முட்ட ஆரம்பித்தது.

இன்னமும் மிச்சம் மீதியிருந்த போதையுடன் குடிசையினுள் படுத்திருந்த மாரி கண்களை கசக்கிக் கொண்டே எரிச்சலுடன் எழுந்தான். நேராக அவளிடம் போய் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டான்.

"சனியனே! என்னடி சமையல் பண்றே? அடுப்பை சரியா எரிய வைக்க துப்பில்லை, வீடு பூரா ஒரே புகை, தூ...!"

அதிர்ச்சியில் உறைந்து போய் மேகலை உட்கார்ந்திருக்க... பாவீ நான் உழைச்ச காசையும் நீ பிடுங்கிக்கிறதால தானே இந்த ஈர விறகைக் கட்டிட்டு மாயறேன். நீயே என்னை அடிக்கிறியே! மனசில் வைதாள்.

குடிசைக்கு வெளியே போய் உட்கார்ந்தான் மாரி. பீடி ஒன்றை பற்ற வைத்து புகையை குப்பென்று இழுத்து சாவகாசமாய் வெளியே விட்டான்.

திண்ணையில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த அவனின் மகள் மாலா பீடி புகையின் நெடி தாளாமல் இரும்ப ஆரம்பித்தாள்.

" சனியன் பிடிச்ச பீடி புகை நாத்தம். சுவாசிக்கவும் முடியலே, படிக்கவும் முடியலே " -- சொல்லிவிட்டு எழுந்து குடிசைக்குள் போனாள்.

பளாரென்று அறைந்தது மாதிரி இருந்தது மாரிக்கு.

(சர்வேசன் 500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை)

பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் துன்பங்களே ஆசிரியர்கள்

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

Saturday, September 5, 2009

புகை (சிறுகதை)


பஸ் ஸ்டாண்டில் காலியாக இருந்த பஸ்சுக்குள் ஏறி ஜன்னல் ஓரமாய் உட்கார இடம் கிடைத்ததில் என்னவோ என் குழந்தைக்கு எல்.கே.ஜி-யில் சேர ஸீட் கிடைத்தது போன்ற மகிழ்ச்சி எனக்கு.
கொஞ்சம் கொஞ்சமாய் பஸ் நிரம்ப பிச்சைக்காரர்கள் ஒவ்வொருவராய் வந்து காசு வாங்கிக்கொண்டு போனார்கள். டிரைவர்களோ சீட்டுக்கட்டுக்களை அடுக்கி தள்ளிவிடும் விளையாட்டு மாதிரி பஸ்களை நெருக்கமாக நிறுத்தி இருந்தார்கள்.

அழுக்கு லுங்கியுடனிருந்த ஒருவன் இரண்டு பஸ்களுக்கிடையில் நின்று கொண்டு சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான். அவன் நின்றிருந்த இடம் போயும் போயும் என்னோட ஜன்னலுக்கு கீழேதான் இருக்க வேண்டுமா? சிகரெட் புகையை நான் கேட்காமலேயே சுவாசிக்க அனுப்பிக் கொண்டிருந்தான்.

தலையை வெளியே நீட்டி அவனிடம் " சார் அப்படி எங்கேயாவது போய் சிகரெட் பிடிக்கக்கூடாதா? " என்று நான் கேட்க--

" தோடா பஸ்சுக்குள்ளார புடிக்க கூடாதுங்கராங்கலேன்னு வெளியே நின்னு பிடிச்சா பெரீசா கேட்க வந்துட்டியே, ஏன் நீ தள்ளி உட்காரு "

" இதுவும் பப்ளிக் இடம் தான். இங்கெல்லாம் சிகரெட் பிடிக்கக் கூடாது "

" யேய் என்னா? என்னான்ர இப்ப?" மிரட்டலுடன் அவன் கேட்கவும் மௌனமானேன்.

என்னை வென்றுவிட்ட நினைப்பில் அலட்சிய பார்வையினை என்னை நோக்கி வீசியவன் மற்றவர்களை பார்த்து சிரித்தவாறே புகை பிடிப்பதை தொடர்ந்தான். பஸ்சுக்குள்ளிருந்தவர்கள் இதை கண்டும் காணதவர்கள் போல படிப்பதிலும் மொபைலிலும் மும்முரமாய் இருந்தனர்.

அடங்கி அவதிப்பட வேண்டியதுதானா? யோசித்தேன்.

அடுத்த நிமிடம்...

திடீரென்று பயங்கர குமட்டல் சத்தத்துடன் ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி வாந்தி எடுப்பது போல நாலைந்து முறை சவுண்ட் கொடுத்தேன்.

அதை சற்றும் எதிர்பார்க்காத அந்த லுங்கிக்காரன் பதறிப் பாய்ந்து தூர ஓடினான் பதட்டத்தில் கீழே விழுந்துவிட்ட சிகரெட்டை எடுக்காமலேயே.

பஸ்சும் புகையை கக்கியபடி புறப்பட எனக்கு நிஜமாகவே வயித்தை குமட்டியது.


Wednesday, August 26, 2009

திடம் (சிறுகதை)

"மூணாவதும் பெண்ணா? கள்ளிப்பால் கொடுக்கற குருவம்மாவுக்கு சொல்லிவிட்ர வேண்டியதுதான்."

டவுன் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையை வந்து பார்த்துவிட்டு மாமியார்க்காரி சொல்லிவிட்டுப் போனது செல்லம்மாவின் காதுகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருந்தது .

பாவி கட்டின புருஷனும் இல்லே இதுக்கு தலையாட்டறான்.

நினைக்க நினைக்க ஆத்திரம் பொங்கியது அவளுக்குள் .
டிஸ்சார்ஜ் ஆகி புருஷனுடன் கிராமத்துக்கு திரும்ப பஸ் ஸ்டாண்டில் நின்றபோது...

ஒரு கடையின் ஓரத்திலிருந்த வண்ண மீன்கள் கண்ணாடித் தொட்டியை கவனித்தாள்.

தன் குட்டிகளுக்கு பின்னால் வாயைத்திறந்துகொண்டே நீந்திக்கொண்டிருந்தது அந்த ஜிலேபி கெண்டை மீன். கெளுத்தி மீன் ஒன்று குட்டிகளை விழுங்க வர, என்ன ஆச்சரியம்! அத்தனை குட்டிகளும் தாயின் வாய்க்குள் புகுந்து கொள்ள டப்பென்று வாயை மூடிவிட்டு ஆபத்து நீங்கியதும் வாயைத் திறக்க குட்டிகள் வெளியேறி மீண்டும் நீந்தத் தொடங்கின.

" சே! ஐந்தறிவுள்ள மீனே தன் குட்டிகளை காப்பாத்திக்க வழிகளை தெரிஞ்சு வச்சிருக்கச்சே ஆறறிவுள்ள தன்னால் குழந்தைகளை காப்பாத்த முடியாதா ?"

புருஷனிடம் சொன்னாள் உறுதியாக. "யோவ் இந்தக் குழந்தையை கொல்லாம வச்சுக் காப்பாத்துவேன்னு சத்தியம் பண்ணிக் கொடுத்தாத்தான் உன்னோட பஸ்ல வருவேன். இல்லாட்டி என் ஊருக்கு போய்க்கிறேன். ஊர்ல இருக்கற மத்த ரெண்டு பொட்டப் புள்ளைங்களையும் கூட என்னிடமே கொண்டு வந்து விட்டுடு. எப்பாடு பட்டாவது காப்பாதிக்கறேன்."