என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Tuesday, October 6, 2009

வராத கண்ணீர் வந்தபோது...

அது 1982-ம் வருடம் அக்டோபர் மாதத்தின் கடைசி நாள்.அப்போதெல்லாம் இப்போ மாதிரி வீட்டுக்கு வீடு டெலிபோன் வசதி இருக்காது. ஒரு தெருவில் ஒன்று அல்லது இருவர் வீட்டில் இருந்தால் ஆச்சர்யம். குழந்தை பிறந்ததை, உறவினர் இறந்ததை தெரிவிக்க இருந்த ஒரே சாதனம் தந்தி தான் .

அன்று இரவு மணி பதினொன்றரை ." சார் தந்தி" என்ற குரல் கேட்டு பதறியடித்து எழுந்தேன். "அப்பா இறந்து விட்டார். உடனே புறப்படவும் " என்ற தந்தி வாசகத்தை படித்துவிட்டு அப்படியே இடிந்து போய் உட்கார்ந்தேன். நான் இருப்பது சென்னை அம்பத்தூரில். அப்பா இறந்தது விழுப்புரத்தில். இப்போ மாதிரி இரவு பேருந்தெல்லாம் அப்போ கிடையாது. கொட்ட கொட்ட முழித்திருந்து அதிகாலை நாலு மணிக்கு வரும் ட்ரைன் பிடித்து சென்ட்ரல் போய் அங்கிருந்து தாம்பரம். ஒரு லாரி டிரைவரிடம் தந்தியை காண்பித்து ஏறி உட்கார்ந்து விழுப்புரம் போய் சேர்ந்த போது மணி ஒன்பதை தொட்டுவிட்டிருந்தது.

இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடெல்லாம் நடந்து கொண்டிருந்தது. கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவின் சடலத்தின் பக்கம் போய் உட்கார்ந்து அவரின் தலையை வருடிக்கொடுத்து சிறிது நேரம் அவரையே உற்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நிமிர்ந்தபோது எல்லோர் கண்களும் என்னையே உற்று நோக்குவதை கண்டேன். என் கண்களிலிருந்து ஒரு பொட்டு கண்ணீர் கூட வராதது அவர்களுக்கெல்லாம் ஆச்சரியமான ஆச்சரியம். "ஏண்டா அப்பா செத்ததுக்கு உனக்கு அழுகையே வரலயாடா?" என்று ஒரு உறவினர் வாயைத் திறந்து கேட்டே விட்டார். "வரல்லியே மாமா நான் என்ன பண்றது?" என்று அவரிடமே கேட்டேன். ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார் அவர் . அதன் பின்பும் ஏனோ தெரியவில்லை மயானம் செல்லும் வழி நெடுகிலும் எனக்கு சுத்தமாக அழுகையே வரவில்லை. இத்தனைக்கும் என் அப்பாவுக்கு என் மேல் தனி பாசம் இருந்தது. " இப்படி அப்பாவியாக இருக்கிறாரே!" என்று நானும் அவர் மேல் கூடுதல் பாசத்தோடிருந்தேன்.
சடங்குகள் முடிந்ததும் வெட்டியான் "இன்னும் யாராவது பார்க்கணுமா? முகத்தை மூடப்போறேன் என்று கூறவும் தூரத்தே "அண்ணா!" என்று கத்திக்கொண்டே வெளியூரிலிருந்து  என் அத்தையும் இன்னொரு உறவினரும்அப்போதுதான் வரவும் சரியாக இருந்தது.

அதன் பின்பு நடந்ததுதான் கிளைமாக்ஸ்.

என் அத்தை பார்ப்பதற்கு அச்சு அசல் என் அப்பாவைப் போலவே இருப்பார். அவர் ஓடி வருவதைப்பார்த்ததும் எனக்கு என் அப்பாவே வருகிற மாதிரி தோன்றியதோ என்னமோ, உடனே " டேய் ஏண்டா எங்கப்பாவை எரிக்கறீங்க?" என்று ஆவேசமாகக் கேட்டுக்கொண்டே சிதையை கலைக்க முற்பட்டிருக்கிறேன். அதை பாய்ந்து தடுத்த உறவினர்கள் என்னை ஒரே அமுக்காக அமுக்கி பிடித்துக்கொள்ள என் பெரிய அண்ணன் சிதைக்கு தீ வைக்க அதை பார்த்து மயங்கி சரிந்திருக்கிறேன் நான். மயக்கம் தெளிந்த பின்னர் " நானா அப்படியெல்லாம் செய்தேன்?" என்று எனக்குள் ஒரு அதிர்ச்சி அலை .

" அதுதானே பார்த்தேன் என்னடா உங்கப்பா செத்ததுக்கு நீ துளி கூட அழலியேன்னு! அதையெல்லாம் தூக்கி அடிக்கற மாதிரி இப்படி பண்ணி எங்களையெல்லாம் பதற வச்சிட்டயே!" என்று என் உறவினர் ஒருவர் கேட்க எனக்கும் அப்போதுதான் விடை கிடைத்தது.

டெய்ல் பீஸ்: 10.10.1910-இல் என் அப்பா பிறந்தார். அவரது நினைவாக இப் பதிவு.
இந்த சம்பவத்தை நான் என் எழுத்தாள நண்பியிடம் விவரிக்கப் போக அவர் அதை ஒரு அழகிய சிறுகதையாக எழுதி அது பிரபல வாரப் பத்திரிகையில் பிரசுரமானது.
I HAD THE WHOLE WORLD IN MY HANDS BUT I GAVE IT AWAY


Friday, September 25, 2009

அஸ்தேயம் / மிதஹாரம் என்ன இவைகள்?

சமீபத்தில் யோகாசனம் பற்றிய புத்தகம் ஒன்றை படித்தேன். அதில் மனத்தாலோ, உடலாலோ, செயலாலோ பிறர் பொருள் எதனையும் அபகரிக்காத பெருந்தன்மையை " அஸ்தேயம் " எனப்படுவதாக போடப்பட்டிருந்தது.

இந்த " அஸ்தேயம் " பற்றி யோசித்தேன். இதில் மனம், உடல் ஆகியவற்றை தவிர்த்து செயலால் பிறர் பொருள் எதனையும் அபகரித்தலை திருட்டு என்று அழைக்கிறோம். இந்த திருட்டு தான் எத்தனை வகை? பணம், நகை மற்றும் பொருள்கள் பிறரிடமிருந்து எப்படியெல்லாம் திருடப்படுகின்றன ?

வங்கியில் இருந்து ஒருவர் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது அவர் கவனத்தை திசை திருப்ப " சார் உங்க பணம் கீழே விழுந்திருக்கு பாருங்க! " என்பான். அவர் கீழே குனிந்து பணத்தை எடுப்பதற்குள் அவர் வைத்திருந்த பணம் அபேஸ் ஆகியிருக்கும். அதைச் சொன்னவனே கீழே சில ரூபாய் நோட்டுக்களை போட்டுவிட்டு மொத்தமாக அடித்துக்கொண்டு போயிருப்பான். சில நூறுகளுக்கு ஆசைப்பட்டு பல நூறுகளை இழந்திருப்பார்.

"அம்மா இந்த அட்ரஸ் எங்கே இருக்கு பாருங்க! " என்று கேட்பார்கள் பைக்கில் வந்த இருவர். பாவம் உதவலாமே என்று எண்ணி அந்த துண்டு சீட்டை வாங்கி அந்த அம்மா படிப்பதற்குள் அவர் கழுத்தில் அணிந்திருக்கும் ஐந்து பவுன் தங்க செயின் அல்லது தாலியை பறித்துக்கொண்டு சிட்டாய் பறந்துவிடுவார்கள் பைக் ஆசாமிகள். உதவப்போய் இழந்ததுதான் மிச்சம்.

மேலும் தங்க காசு என்று பித்தளை காசுகளை கொடுத்து பல லட்ச ரூபாய்கள் மோசடி, பாலிஷ் போட்டு தருகிறோம் என்று கூறி நகைகளுக்கு பதிலாக பொட்டலத்தில் கல்லைக் கட்டி கொடுத்துவிட்டு டிமிக்கி கொடுத்த ஆசாமி, ரூபாய் நோட்டுக்களை இரட்டித்துத் தருகிறோம் என்று கள்ள நோட்டுக்களை தந்துவிட்டு ஓடிய கும்பல், இன்னும் பலவிதங்களில் மக்களை ஏமாற்றும் ஆசாமிகள் என்று தினமும் பத்திரிக்கைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மக்கள் ஏமாறாமல் உஷாராக இருப்பதற்காகத்தான் அவைகளை செய்தியாக போடுகிறார்கள். படிக்கும் நாம்தான் அவைகளை கவனத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.

சரி. பஸ்களில் எப்படி பிக்பாக்கெட் அடிக்கிறார்கள் என்பதை பார்ப்போமா? இது நான் கண்ணால் பார்த்த அனுபவம். அதிக கூட்டமுள்ள பஸ்களை தேர்ந்தெடுத்து மூன்று பேர் கொண்ட கும்பல் ஏறும். அதில் முதலாமவன் கண்கள் எல்லாம் சிவந்து குடிகாரன் மாதிரி இருப்பான். இரண்டாமவன் யாரிடம் தேட்டை போடலாம் என்று நோட்டம் விட்டு பாக்கெட்டில் பர்சை வெளியே தெரியும்படி வைத்திருப்பவன் எவனாவது சிக்கி விட்டால் அவன் பக்கத்தில் போய் நிற்பான். இவனிடமிருந்து சிக்னல் வந்ததும் முதலாமவன் முன்னே சென்று அவன் மேல் விழுவான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரண்டாமவன் பர்சை இரண்டு விரல்களால் லாவகமாக எடுத்து மூன்றாவது ஆளிடம் பாஸ் செய்துவிடுவான். அடுத்த ஸ்டாப்பில் மூவரும் இறங்கி போனதுக்கு அப்புறம்தான் பர்ஸ் போன விவரம் தெரிய வரும். அப்புறமென்ன? குய்யோ! முய்யோ! என்று ஒரே கத்தல்தான். இப்படித்தான் ஒரு முறை சைதாப்பேட்டையில் 5-B பஸ்ஸில் ஒரு காலேஜ் மாணவனிடம் இருந்த பர்சை ஒருவன் எடுக்க இருந்ததை கவனித்த நான் அதை முறியடிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பஸ்ஸில் இல்லாத என் மாமாவிடம் சொல்வது போல "மாமா பர்ஸ் பத்திரம் அதில்தான் என்னோட ரயில் டிக்கெட் பணமெல்லாம் இருக்கு! " என்று ஒரு புருடா விட்டேன். உடனே அந்த மாணவன் உள்பட எல்லோரும் உஷாராகி தங்கள் பொருள்களை பத்திரப்படுத்தி விட்டனர்.

பிக் பாக்கெட் கோஷ்டி பஸ்ஸில் ஏறி இருப்பது தெரிந்தால் கண்டக்டர் "முன்னே போங்க! முன்னே போங்க! " என்று கத்துவார். அவர் காட்டிக்கொடுத்தால் பின்னால் அந்த ரூட்டில் அவர் தொழில் செய்ய முடியாது.

அஸ்தேயம் பற்றி சொன்னீங்க சரி. மிதஹாரம் பற்றி ஒண்ணுமே சொல்லலியேன்னு தானே கேட்கறீங்க? அது வந்துங்க ஒரு கெட்ட செயலைப் பற்றி சொன்னோமே ஒரு நல்ல செய்தியா நாம எப்படி சாப்பிடனும் என்று மிதஹாரம் சொல்லித்தருதேன்னுதான் அதையும் தலைப்பில் சேர்த்து இருக்கேன். ஆகார விஷயத்தில் மிதமான மனப்போக்கு அமையவேண்டும் என்பதை மிதஹாரம் (அதாவது எப்போதும் அரை வயிறு அளவே உணவு உண்ண வேண்டும், மீதமுள்ள அரை வயிற்றை நீருக்காகவும், வாயு சஞ்சாரத்துக்காகவும் ஒதுக்கி விடவேண்டும்) எனப்படுவதாக போடப்பட்டிருந்தது.

என்ன இதை படிக்கும் நீங்கள் இரண்டிலுமே இனி உஷாராக இருப்பீர்கள் தானே?.

Friday, September 11, 2009

கோவணம் என்பது என்ன?

நான் படிக்கும் போது ஒவ்வொரு சனிக்கிழமையும் என் அம்மா என்னையும் என் அண்ணனையும் கூப்பிட்டு கோவணம் கட்டச் சொல்லி எங்கள் தலையிலும் உடம்பிலும் நல்லெண்ணையை தேய்த்துவிட்டு அது நன்றாக ஊறும் வரை தோட்ட வேலை செய்துவிட்டு வாங்க என்று அன்புக் கட்டளை இடுவாள். " எதுக்கும்மா கோவணம் கட்டிண்டு எண்ணெய் தேச்சுக்கணும்? நிஜாரோடேயே தேய்ச்சிக்கரேனே ?" என்று நான் கேட்டா " அப்புறம் நிஜாரெல்லாம் எண்ணெய் ஆயிடும் , ஸ்கூலுக்கு எதை போட்டுக்கிட்டு போவே?" என்பாள். அப்புறம் என்ன? அண்ணனுடன் குஷியாக வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்று அங்கு உள்ள வாழை மரங்களுக்கு தண்ணீர் செல்ல வழி அமைத்தும், பூச்செடிகளை அழகு படுத்தியும், களை பிடுங்கியும் ஆடு மாடுகள் வராத மாதிரி வேலியை நெருக்கமாக கட்டிவிட்டு பிறகு சுகமாக ஒரு வெந்நீர் குளியல் போட்டு விட்டு வந்தால் அம்மா தட்டில் சாப்பாடு போட்டு "சாப்பிடுங்கடா ! " என்பாள்.


படித்து முடித்து அரசு வேலைக்கு போய் மாடு மாதிரி உழைத்துவிட்டு இப்போது ஓய்வு பெற்ற பின் நேரத்தை பயனுள்ள விதத்தில் செலவிட தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு மணி நேரம் தோட்ட வேலை செய்வதில் ஒரு தனி சுகத்தை அடைகிறேன். ஆனால் என் மனைவியோ " நீங்க தோட்ட வேலை செய்கிறேன் பேர்வழின்னு இப்படி வேட்டி பூரா மண்ணை பூசிக்கிட்டு வரீங்களே, இனிமே பேசாம கோவணம் கட்டிக்கிட்டு வேலை செய்யுங்க!" என்கிறாள். அது சின்ன வயசில் சரி. இப்போ?

இதைப் பற்றி சிந்தித்தும் புத்தகங்களை படித்தும் பார்த்தேன். இந்த கோவணம் என்பது என்ன? ஒரே துண்டுத் துணியால் ஆன இடைக்கு கீழ் அணியும் ஆடை. பொதுவாக, ஆண்கள் மட்டுமே இதை அணிகிறார்கள். துண்டு மற்றும் பழைய வேட்டிகளில் இருந்து கிழிக்கப்பட்ட துண்டுத் துணியைத்தான் இதற்கு பயன்படுத்துகின்றனர் . இதை இடையில் கட்ட அரைஞாண் கயிறு (அருணாக் கயிறு) உதவுகிறது.

வயலில் வேலை செய்பவர்கள் மற்றும் வெயிலில் வேலை செய்யும் ஏழைகள் முன்பு இதை பயன்படுத்தி வந்தார்கள். பழைய கால சினிமாக்களில் ஆண்கள் இதை கட்டிக்கொண்டு ஏர் உழுவதையும், நாத்து பறிப்பதையும் , நடுவதையும் பார்க்கலாம். இப்போதும் ரயில் பயணங்களின்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக வயலில் வேலை செய்பவர்களை கோவணத்துடன் காண முடிகிறது. நாகரீகம் முன்னேறவும் கிராமத்தில் வசிப்பவர்களும் இதை துறந்து விட்டு அண்டர்வேர் (வடிவேலு, ராமராஜன், ராஜ்கிரண் ஆகியோர் இது தெரிகிற மாதிரி வேட்டியை தூக்கி கட்டி இருப்பார்கள்) எனப்படும் உள்ளாடையையே தற்போது அணிகின்றனர். தற்போது இளைய தலைமுறையினர் யாரும் இதை அணிய விரும்புவதில்லை. எனினும் நடிகர் கமலஹாசன் அந்த காலத்தில் " பதினாறு வயதினிலே" படத்தில் வெறும் கோவணத்துடன் தோன்றி அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். உள்ளாடையாக இதை அணிவதை தற்காலத்தில் நாகரிகமாக எவராலும் கருதப்படுவதில்லை. ஆயத்த உள்ளாடைகள் வந்து விட்ட பிறகும் வறுமை மற்றும் பழக்கம் காரணமாகவோ எளிமை கருதியோ சிலர் கோவணம் அணிகிறார்கள். அந்த காலங்களில் ஆண்கள் குளிக்கும்போது கோவணத்துடன் குளித்து பின் உலர்ந்த கோவணம் ஒன்றை கட்டிக்கொள்வார்கள். இதை வயது வித்தியாமின்றி, சிறியவர் முதல் பெரியவர், முதியவர் என எல்லோரும் கட்டிக்கொண்டனர். சிறு ஆண் பிள்ளைகளுக்கு வீட்டில் இருக்கும் போது இதை மட்டுமே கட்டி விடுவதுண்டு. கிராமங்களில் சின்ன பெண் குழந்தைகளுக்கு கூட இதை கட்டிவிடுவதுண்டு. காசியில் சாதுக்கள், சாமியார்கள் கோவணம் மட்டுமே அணிந்து திரிவதை பார்கிறோம். இவ்வளவு ஏன்?முருகக் கடவுளே ஆண்டியாக இருந்த போது கோவணத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

இதையெல்லாம் இப்போ எதுக்கு எங்களுக்கு சொல்லிக்கிட்டு இருக்கே என்கிறீர்களா? இப்போதுள்ள சிறுவர்களிடம் (ஏன் உங்களில் சிலரிடம் கூட) கோவணம் என்றால் என்ன என்று கேட்டுப் பாருங்கள். நீங்களோ அல்லது அவர்களோ பதில் சொல்லிவிட்டால் நான் இந்த பதிவையே போடவில்லை என்று நினைத்து விட்டுப் போகிறேன்.