அன்று இரவு மணி பதினொன்றரை ." சார் தந்தி" என்ற குரல் கேட்டு பதறியடித்து எழுந்தேன். "அப்பா இறந்து விட்டார். உடனே புறப்படவும் " என்ற தந்தி வாசகத்தை படித்துவிட்டு அப்படியே இடிந்து போய் உட்கார்ந்தேன். நான் இருப்பது சென்னை அம்பத்தூரில். அப்பா இறந்தது விழுப்புரத்தில். இப்போ மாதிரி இரவு பேருந்தெல்லாம் அப்போ கிடையாது. கொட்ட கொட்ட முழித்திருந்து அதிகாலை நாலு மணிக்கு வரும் ட்ரைன் பிடித்து சென்ட்ரல் போய் அங்கிருந்து தாம்பரம். ஒரு லாரி டிரைவரிடம் தந்தியை காண்பித்து ஏறி உட்கார்ந்து விழுப்புரம் போய் சேர்ந்த போது மணி ஒன்பதை தொட்டுவிட்டிருந்தது.
இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடெல்லாம் நடந்து கொண்டிருந்தது. கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த அப்பாவின் சடலத்தின் பக்கம் போய் உட்கார்ந்து அவரின் தலையை வருடிக்கொடுத்து சிறிது நேரம் அவரையே உற்று பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நிமிர்ந்தபோது எல்லோர் கண்களும் என்னையே உற்று நோக்குவதை கண்டேன். என் கண்களிலிருந்து ஒரு பொட்டு கண்ணீர் கூட வராதது அவர்களுக்கெல்லாம் ஆச்சரியமான ஆச்சரியம். "ஏண்டா அப்பா செத்ததுக்கு உனக்கு அழுகையே வரலயாடா?" என்று ஒரு உறவினர் வாயைத் திறந்து கேட்டே விட்டார். "வரல்லியே மாமா நான் என்ன பண்றது?" என்று அவரிடமே கேட்டேன். ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார் அவர் . அதன் பின்பும் ஏனோ தெரியவில்லை மயானம் செல்லும் வழி நெடுகிலும் எனக்கு சுத்தமாக அழுகையே வரவில்லை. இத்தனைக்கும் என் அப்பாவுக்கு என் மேல் தனி பாசம் இருந்தது. " இப்படி அப்பாவியாக இருக்கிறாரே!" என்று நானும் அவர் மேல் கூடுதல் பாசத்தோடிருந்தேன்.
சடங்குகள் முடிந்ததும் வெட்டியான் "இன்னும் யாராவது பார்க்கணுமா? முகத்தை மூடப்போறேன் என்று கூறவும் தூரத்தே "அண்ணா!" என்று கத்திக்கொண்டே வெளியூரிலிருந்து என் அத்தையும் இன்னொரு உறவினரும்அப்போதுதான் வரவும் சரியாக இருந்தது.
அதன் பின்பு நடந்ததுதான் கிளைமாக்ஸ்.
என் அத்தை பார்ப்பதற்கு அச்சு அசல் என் அப்பாவைப் போலவே இருப்பார். அவர் ஓடி வருவதைப்பார்த்ததும் எனக்கு என் அப்பாவே வருகிற மாதிரி தோன்றியதோ என்னமோ, உடனே " டேய் ஏண்டா எங்கப்பாவை எரிக்கறீங்க?" என்று ஆவேசமாகக் கேட்டுக்கொண்டே சிதையை கலைக்க முற்பட்டிருக்கிறேன். அதை பாய்ந்து தடுத்த உறவினர்கள் என்னை ஒரே அமுக்காக அமுக்கி பிடித்துக்கொள்ள என் பெரிய அண்ணன் சிதைக்கு தீ வைக்க அதை பார்த்து மயங்கி சரிந்திருக்கிறேன் நான். மயக்கம் தெளிந்த பின்னர் " நானா அப்படியெல்லாம் செய்தேன்?" என்று எனக்குள் ஒரு அதிர்ச்சி அலை .
" அதுதானே பார்த்தேன் என்னடா உங்கப்பா செத்ததுக்கு நீ துளி கூட அழலியேன்னு! அதையெல்லாம் தூக்கி அடிக்கற மாதிரி இப்படி பண்ணி எங்களையெல்லாம் பதற வச்சிட்டயே!" என்று என் உறவினர் ஒருவர் கேட்க எனக்கும் அப்போதுதான் விடை கிடைத்தது.
டெய்ல் பீஸ்: 10.10.1910-இல் என் அப்பா பிறந்தார். அவரது நினைவாக இப் பதிவு.
இந்த சம்பவத்தை நான் என் எழுத்தாள நண்பியிடம் விவரிக்கப் போக அவர் அதை ஒரு அழகிய சிறுகதையாக எழுதி அது பிரபல வாரப் பத்திரிகையில் பிரசுரமானது.