என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 29, 2010

இன்னும் ஒரு ஸ்பூன்





"அப்பப்பா! என்ன ஒரு அலைச்சல்? மீனாட்சி சூடா காபி கொண்டு வா,'' என்றவாறே வந்தார் சபேசன்.


"வயசான காலத்தில் கிருஷ்ணா ராமான்னு வீட்டில் இருக்காம சோஷல் சர்வீஸ் அது இதுன்னு உடம்பை ஏன் இப்படி வருத்திக்கறீங்க? எனக்கும் வயசாச்சில்ல? உங்களுக்கு சிசுருஷை செய்ய இனிமே என்னால முடியாது; இந்தாங்க," என்று காபியை அவரிடம் நீட்டினாள் மீனாட்சி.


காபியை வாங்கிக் குடித்தவர் "சர்க்கரை இன்னும் கொஞ்சம் போடணும், அப்பத்தான் வயித்தில் இறங்கும்" என்றார்.


ஒரு வாரமாகவே இப்படித்தான். முந்தின வாரம் சபேசன் உடம்பை பரிசோதித்த டாக்டர் சர்க்கரையை குறைவா உபயோகிக்கணும் என்று பயமுறுத்தியிருந்தார். ஆனால் சர்க்கரை குறைவாக போட்டு காபி கலந்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வாங்கி கலக்கிக் கொண்டுதான் குடிப்பார்.


இரவு மாட்டுப் பெண் பகுளா ஊரிலிருந்து வந்ததும் நடந்தது அத்தனையும் அவளிடம் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டாள் மீனாட்சி.


மறுநாள் காலை பகுளா கலந்த முதல் காபியை கேட்டு வாங்கிக் குடித்த சபேசன் "தூ!தூ! என்று துப்பாத குறை!


"என்னம்மா இது? சர்க்கரையே போடலியா?" என்று கேட்டார்.


"ஆமாம் மாமா! சர்க்கரை வாங்கி வைக்க அவர் மறந்துட்டார். மத்தியான காபிக்கு வாங்கி வந்துடறேன், இப்ப குடிங்க" என்றாள்.


வேண்டா வெறுப்பாக குடித்து வைத்தார் சபேசன்.


மத்தியான காபியையும் சர்க்கரை போடாமலேயே குடிக்க வேண்டியதாயிற்று. கடைக்கு போய் வாங்கி வர முடியாமல் அடை மழை.


மறு நாள் காலை மீனாட்சி கலந்து கொடுத்த காபியை எவ்வித குறையும் சொல்லாமல் குடித்தார் சபேசன்.


மீனாட்சிக்கு ஆச்சரியம். "என்னடீ இது? முந்தா நாள், இன்னிக்கிப் போலவேதான் ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு காபி கொடுத்தேன். தாம் தூம்னு அமர்க்களம் பண்ணினார். ஒரே நாளில் அவரை எப்படி மாத்தினே?" என்று கேட்டாள்.


"அது வேறொன்னுமில்லை அத்தை, ரெண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டு குடிச்சவருக்கு ஒரு ஸ்பூன் போட்டு காபி குடிப்பதுன்னா ரொம்பக் கஷ்டமாய் இருக்கும். நேத்து பூரா சர்க்கரையே இல்லாம காபி குடிச்சார். இன்னிக்கு அரை ஸ்பூன் போட்டு குடிச்சாலும் அவருக்கு உலகளவுக்கு இனிக்கிறது" என்றாள் பகுளா.




(18.1.93 "மங்களம்" இதழில் வெளியான என் சிறுகதை)

Monday, November 22, 2010

புதிரான ஊர்மிளா


"ஆனாலும் அந்த ஊர்மிளாவுக்கு ரொம்பத்தான் திமிர்! பாரேன்! நாங்க ரெண்டு பேரும் ஒரே தெருவில்தானே இருக்கோம்? நேற்று மாலை ஆசை ஆசையாய் அவ வீட்டுக்குப் போய் கோயிலுக்கு போகலாம்,ஒருத்தருக்கொருத்தர் துணையாச்சேன்னு கூப்பிட்டேன். உடனே மூஞ்சில அடிச்ச மாதிரி நிறைய படிக்கணும் உன்னோட வரமுடியாதுன்னுட்டா!" என்றாள் காயத்ரி.

"கரெக்ட் காயத்ரி! கொஞ்சம் கூட மேனர்ஸ் தெரியாத ஜன்மம் !" என்றாள் ராதா.

"இரண்டு பேரும் சரியா சொன்னீங்க! மஞ்சு கல்யாணம் நடந்ததே, அன்னிக்கும் அப்படித்தான். சாயங்காலம் ரிசப்ஷனுக்கு போகலாம்னு கூப்பிட்டேன். முதலில் சரின்னு சொன்ன அவளை நம்பி ஆறரை மணி வரை வீட்டில் காத்திருந்துவிட்டு ஏமாந்து போனேன். அப்புறமா பஸ்சை பிடிச்சு நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு கல்யாண சத்திரத்துக்குப் போனா எனக்கு பத்தடி முன்னே அந்த கனகாவோட பேசிட்டிருக்கா! நமக்கென்ன அழகில்லையா?அறிவில்லையா? நம்மோட வர கசக்கிற அவளுக்கு அந்த கனகாவோட மட்டும் போக இனிக்கிறதா? என்னிக்காவது அவ நம்மகிட்ட வராமலா போகப் போறா? அப்பா காட்டலாம் நம்ம வேலையை. பஸ் வருது, சீக்கிரம் வாங்க போகலாம்!" என்றாள் மீனா.

"ஏண்டி ஊர்மிளா, அந்த காயத்ரி உன்னை கோயிலுக்கு வரச்சொல்லி கூப்பிட்டாளாமே! நீ வர முடியாதுன்னுட்டியாமே! அவ அம்மா என்னை ரேஷன் கடையில் பார்த்து சொன்னா. ஏன் அப்படிச் சொன்னே? அவளோட போறேன்னா நான் வேண்டாம்னா சொல்லப் போறேன்?" என்றாள் அம்மா.

"போம்மா, உனக்கு ஒண்ணும் தெரியாது! அந்த ராதா, மீனா, காயத்ரி எல்லாம் என்னைவிட அழகானவங்க. அவங்களோட நான் வெளியில் போனா என்னோட அழகு எடுபடாது. அதான் என்னைவிட அழகில் குறைந்த கனகாவோட எங்கேயும் போறேன்,வரேன். போற இடத்தில் எல்லாரும் என்னை பார்க்கறாங்க, என் அழகைப் பத்தி பேசறாங்க. அவங்களோட போனா என்னை யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டாங்க. ஹும்! உனக்கு எங்கே இதெல்லாம் புரியப் போறது?" என்றாள் ஊர்மிளா தன் அம்மாவிடம்.

(7.11.90 தினமலர் கதைமலரில் வெளியான என் சிறுகதை)




Wednesday, November 10, 2010

வளையாத மரம்











கொட்டிய மழையில் குளித்து,
அடித்த புயற் காற்றில்
தலையாற்றிக்
கொண்டிருந்த என்னை,
'தலை விரித்தாடிற்று தென்னை'
என்று செய்தி போடுகிறீர்களே?
என் ரசனையைப் புரிந்துகொள்ள
மறுப்பதென்னே?
கேட்டது தென்னை மரம்.