என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, February 25, 2010

போதிக் கண்

"வாசனை ஊதுவத்தி, நறுமண சாம்பிராணி வாங்கிக்குங்க சார்."

சம்பள நாள் அன்று குருடன் ஒருவன் அலுவலகத்தில் நுழைந்து விற்றுக் கொண்டிருந்தான்.

"ஏம்பா, யார் அவனை உள்ளே விட்டது?" கத்தினேன் நான்.

"ஹெட் கிளார்க் சார்! இரண்டு கண்ணும் தெரியாத குருடன் அவன். பிச்சை எடுக்காம ஏதோ வியாபாரம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறான். கண்டுக்காம போங்க சார்" என்று டைபிஸ்ட் ஏகாம்பரம் கூறினான்.

எம்.டி. இன்ஸ்பெக் ஷன் . எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

"சார், உங்களை அந்த ஒர்க்ஸ் பைலை எடுத்துக்கொண்டு வரச் சொன்னார் எம்.டி." ஆபிஸ் பையன் வந்து சொல்லவும் மயக்கம் வராத குறைதான் எனக்கு. என்ன கேட்கப் போகிறாரோ?"

"என்ன மிஸ்டர் இது? முக்கியமான பைலில் இங்க்கை கொட்டி வச்சிருக்கீங்க? இதுதான் நீங்க செய்யற வேலையின் லட்சணமா?"

"சார்... அவசரத்தில் கை தவறி.. கொட்டி... சாரி சார்... இனிமே... " வாய் குழறியது எனக்கு.

"லுக் மிஸ்டர், அவசரத்திலும் ஒரு நிதானம் இருக்கணும். ரயில்ல, பஸ்ல லாட்டரி டிக்கட், ஊதுவத்தி,பிளாஸ்டிக் கவர்னு விக்கற குருடர்களிடம் ரூபா நோட்டை நீட்டினா அதை இரண்டா மடிச்சு உள்ளங்கையில் வச்சு சைஸ்
பார்த்து எவ்வளவு ரூபான்னு தீர்மானிச்சு மீதி சில்லறையை சரியா எண்ணிக் கொடுத்து வியாபாரம் பண்றதை பார்த்திருக்கீங்களா? பார்வை இல்லாமலிருந்தும் நிதானமா நடந்துக்கற அவங்க உசத்தியா? இரண்டு கண்கள் இருந்தும் நிதானமில்லாம நடந்துக்கற நீங்க உசத்தியான்னு நல்லா யோசிச்சுப் பாருங்க" -- எம்.டி.கூறவும்,

போன மாதம் ஊதுவத்தி விற்க வந்த அந்த குருட்டு இளைஞன் முகம் நினைவுக்கு வர, "இனிமே நிதானமா நடந்துக்கறேன் சார்" என்றேன் இருவருக்குமாகச் சேர்த்து.

( "குங்குமம்" 10.12.99 இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

மென்மையாக நடந்து கொள்ளுங்கள். துணிவுடன் இருப்பது சாத்தியமாகும்

Wednesday, February 24, 2010

கை மேல் பலன்

கண்களில் ஒரு வித மிரட்சியுடன் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தாள் பவித்ரா. முந்தின நாள் ஒரு கல்லூரி மாணவன் தன் நண்பனிடம் சவால் விட்டுவிட்டுப் போயிருந்ததே அவளின் மிரட்சிக்குக் காரணம்.

தினமும் அவர்கள் இருவரும் வேண்டுமென்றே பெண்கள் மேல் விழுந்துவிட்டு 'சாரி' சொல்வதும், புடவைத் தலைப்பை இழுப்பதும், முதுகில் கையை படரவிடுவதும், ஃ பிளையிங் கிஸ் கொடுப்பதும்.. நினைக்க நினைக்க அவள் முகமெங்கும் வியர்வை முத்துக்கள் அரும்பத் தொடங்கின. முந்தின நாள் ஒரு படி மேலே போய் "நாளைக்கு பஸ்ஸிலிருந்து இறங்கறப்ப இவங்க இடுப்பைக் கிள்ளி விட்டு இறங்கலேன்னா என் பெயரை மாத்திக்கறேன்டா" என்று அவள் காது படவே சொல்லிவிட்டுப் போயிருந்தான் அந்தக் கல்லூரி மாணவன்.

அவன் வந்திருக்கிறானா என்று பஸ்ஸினுள் ஒரு நோட்டம் விட்டாள். சவால் விட்ட ஃபங்க் தலையன் அவள் பக்கத்தில் நின்று கொண்டு அவளையும் அவள் மடியையும் வெறித்துப் பார்ப்பதை கவனித்தாள்.

பஸ் அடுத்த ஸ்டாப்பிங்கை நெருங்கும் சமயம் "டேய் நல்ல வேளை இன்னிக்காவது தெரிஞ்சுதே! இல்லேன்னா நேத்து போட்ட சவாலில் ஜெயிப்பதற்காக இடுப்பைக் கிள்ளிட்டு இந்நேரம் கம்பி எண்ணிக் கொண்டிருப்பேன். இவ்வளவு நாளா எப்படிடா நாம பண்ணின சில்மிஷங்களை பொருத்துகிட்டிருந்தாங்க?"

நண்பனிடம் கூறிவிட்டு அந்த ஸ்டாப்பிங்கிலேயே இறங்கிப் போய்விட்டான் அந்த ஃபங்க் தலையன். அவனைத் தொடர்ந்து அவன் நண்பனும் இறங்கிவிட்டான்.

அடுத்த ஸ்டாப்பிங்கில் "ரொம்ப தாங்க்ஸ்" என்றவாறே பவித்ராவிடம் கொடுத்து வைத்திருந்த தன் யூனிபார்மை வாங்கிக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கிப் போனார் ஒரு பெண்மணி.

ஒரு பெண் போலீஸின் கையில் வைத்திருந்த போலீஸ் யூனிபார்மை வாங்கி தன் மடியில் வைத்திருந்ததற்கு இப்படி கை மேல் ஒரு பலனா?

நிம்மதியாக பெருமூச்சு விட்டாள் பவித்ரா.

(14.5.98 "சாவி" இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

"வெற்றி--தோல்விகள் வாழ்வின் ஓரிரு சம்பவங்களை மட்டுமே சார்ந்தவை அல்ல!அவை முழு வாழ்வையும் சார்ந்தவை"

Saturday, February 20, 2010

கலைத்துவிடு காவ்யா




வீடும் நர்ஸிங் ஹோமும் சேர்ந்தே கட்டப்பட்டிருந்த டாக்டர் நளினியின் நர்ஸிங் ஹோமுக்கு காவ்யா போய்ச் சேர்ந்தபோது அங்கு நாலைந்து பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

"உங்களுக்கு இது எத்தனாவது மாசம்?" என்று ஒருத்தி கேட்டாள், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவளிடம்.

"ரெண்டு மாசம் முடிஞ்சிடுச்சு. ஏற்கனவே ரெண்டும் பொட்டைப் பிள்ளைங்க. எங்கே இதுவும் பொட்டையா பிறந்திடப்போவுதேன்னு இதை கலைச்சிடனும்னு ஒத்தைக் காலில் நிக்கறாங்க மாமியாரும், நாத்தனாரும். அவங்க தொல்லை பொறுக்க முடியலை" என்றாள் அவள்.

"டாக்டர் வந்துட்டாங்க! டாக்டர் வந்துட்டாங்க!" கூட்டத்தில் யாரோ முணுமுணுத்தார்கள்.

வெளியில் ஒரு அவசர கேஸை பார்த்துவிட்டு, நர்சிங் ஹோமுக்குள் வரும்போதே, எல்லோரையும் தன் கண்களால் சர்வே செய்தவாறே வந்தாள் டாக்டர் நளினி.

காவ்யாவைப் பார்த்த மாத்திரத்தில் "அடடே வந்துட்டியா? வா,வா" என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றாள் நளினி.

டாக்டர் நான் இங்கே வந்து இதை செஞ்சதைப் பத்தி என் வீட்டுக்காரருக்கு எந்த சந்தர்ப்பத்திலும் யார் மூலமாகவும் தெரியவே கூடாது. அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. நமக்கு இருக்கற பணத்துக்கு எதுக்கு இப்படியெல்லாம் செய்யறே என்பார். நான்தான் மனசு கேட்காம வந்து இதை பண்றேன். அவர் வீட்டுக்கு திரும்புவதற்குள் நான் வீட்டுக்குப் போயிடணும்" என்று சொல்லிவிட்டு,

ஏற்கனவே பூஜை அறையில் போட்டிருந்த ரங்கோலி கோலத்தை கலைத்துவிட்டு டாக்டர் விரும்பியபடி, அந்த இடத்தில் புதிதாக ஐயப்பன் படத்தை ரங்கோலியில் போட ஆரம்பித்தாள் காவ்யா.

("சாவி" வார இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

சுதந்திரமாகச் சிந்தியுங்கள்! எண்ணப் பாய்ச்சலில் அண்ட வெளியில் பாய்ந்து பழகுங்கள்!

Friday, February 5, 2010

'அரசு'வும் நானும்

அது 1975-ம் வருடம். உதவியாளராக பொள்ளாச்சியில் பணியேற்ற போது என்னுடன் பணி புரிந்த நண்பர்களில் திரு எஸ்.முத்துகுமாரசாமி ஒருவர். அவர் 'முல்லை மணாளன்' என்ற புனைப் பெயரில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி பல பரிசுகளை அள்ளியவர்.

நான் அவ்வப்போது சொல்லும் கருத்துக்களை கேட்டுவிட்டு "சார் நீங்க ஏன் பத்திரிகைகளுக்கு எழுதக் கூடாது ?"என்று கேட்பார். "அட போங்க சார்! நானாவது எழுதறதாவது? கிண்டலடிக்கறீங்களா?" என்று சிரித்துக்கொண்டே போய்விடுவேன்.

ஒரு நாள் ஒரு போஸ்ட் கார்டில் 'குமுதம்' விலாசத்தை எழுதிக் கொண்டுவந்து " சார் இதில் உங்களுக்குத் தோன்றும் கேள்விகளை எழுதுங்கள், மற்றதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்!" என்றார். அவர் சொன்ன மாதிரியே முழு பக்கமும் கேள்விகளால் நிரப்பி ஒரு முன் எச்சரிக்கையாக என் பெயருக்குப் பதிலாக கே.பகவான், பொள்ளாச்சி என்று போட்டு அனுப்பிவிட்டேன்.

என்ன ஆச்சரியம்? அடுத்தவாரம் குமுதத்தில் அரசு கேள்வி-பதிலில் என்னுடைய முதல் கேள்வியையே போட்டு அதற்கு பதிலும் கொடுத்திருந்தார்கள். 'பார்த்தீங்களா, என்னவோ சொன்னீங்களே!' என்று அந்த நண்பர் சொல்லவும் சந்தோஷத்தில் என்ன பதில் சொல்வதென்பதே எனக்கு தோணவில்லை.

அப்புறமென்ன? வாரா வாரம் கே. பகவான் பொள்ளாச்சி, ரேகா ராகவன், கோவை என்று அரசு பதில்களில் தோன்றி ஒரே ஆரவாரம்தான். அப்போதெல்லாம் குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலையில் உள்ள முதல் எழுத்து 'அ'-வும், ரா.கி.ரங்கராஜனில் உள்ள 'ர'-வும் . ஜா.ரா.சுந்தரேசனில் உள்ள 'சு'-வும் சேர்த்து மூவரும் வாசகர்களின் கேள்விகளுக்கு 'அரசு' பதில்கள் என்று அளிக்கிறார்கள் என்பதாக ஒரு செய்தி உலா வந்துகொண்டிருந்தது. (பின்னால் அது எஸ்.ஏ.பி தான் என்பது குமுதத்திலேயே வெளியானது.)

அப்போதே அவர் பதில் அளிக்கும் விதத்தை கூர்ந்து கவனித்து எனது எழுதும் திறமையை வளர்த்துக்கொண்டு அதிலிருந்து வாசகர் கடிதம், சிரிப்பு, துணுக்குகள் என்று உலா வர ஆரம்பித்து சிறுகதைக்குள்ளும் புகுந்து பார்த்துவிட்டு இப்போது ப்ளாக்குக்குள்.

கேள்விகளுக்கு அரசு அளிக்கும் பதில்கள் சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும். உதாரணத்துக்கு 'நகை உங்களுக்குப் பிடிக்குமா? ' என்ற என் கேள்விக்கு ' ஊஹூம் நான் போட்டுக் கொள்வதில்லை' என்று அவர் பதில் அளித்திருந்தார். இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். பொன் நகை மற்றும் நகைச்சுவை இவைகளை கருத்தில் கொண்டு பொதுவாக 'நகை' என்று குறிப்பிட்டிருந்தேன். அவரும் 'ஊஹூம் நான் போட்டுக் கொள்வதில்லை' என்று நகையையும் நகைச்சுவையையும் நான் போட்டுக்கொள்வதில்லை என்று இரு பொருள்பட பதில் அளித்து அசர வைத்தார். என் கேள்விகள் சிலவற்றையும் அதற்கு 'அரசு' அளித்த பதில்களையும் அதிலிருந்து தொகுத்து கீழே தந்துள்ளேன்.

<><><><><><><><><><><><><><><><><><><><><>

கே: என் மனைவி எனக்கு முன்னதாகவே சாப்பிட்டுவிடுகிறாள்.

ப: சமையல் பரவாயில்லை என்று சர்டிபிகேட் கொடுத்தாரா? அதல்லவா முக்கியம்?

<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே: திருமணங்களில் 'டும் டும்' கொட்டக்கூடாது என்று ஓர் உத்தரவு போட்டால்?

ப: காது பாதி செவிடாகாவிட்டால் நமக்குக் கல்யாணத்துக்குப் போய் வந்த திருப்தியே இருப்பதில்லை. இது மரபு. மாநாய்கன் பெண்ணுக்கும் மாசாத்துவான் மகனுக்கும் நடந்த திருமணத்தின்போது 'முரசு இயம்பின, முருடு (மத்தளம்) அதிர்ந்தன" என்று வர்ணிக்கிறார் இளங்கோ அடிகள்.
<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே: 'ப்ரா' வைக் கண்டுபிடித்தவன் எவன்?

ப: எவனாக இருந்தால் என்ன, அவன் வாழ்க.

<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே: சுத்தமான ஆங்கிலத்தில் எழுத இங்கிலிஷ்காரனாக இருக்க வேண்டும் என்பது அவசியமா?

ப: ஹிக்கின்ஸ் பாகவதர் பாடுகிறார், நம்பமுடியாத அளவுக்கு அற்புதமாகப் பாடுகிறார். ஆனாலும் கிளிப்பிள்ளை கிளிப்பிள்ளைதானே?


<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே. பெண்கள் வாய்ஸ் மட்டும் ஸ்வீட்டாக இருக்கக் காரணம்?

ப: வாய்ஸ் ' மட்டும் ' என்ன மட்டும்? முழுக்கவே ஸ்வீட்தான். (ஆண் குரலோடு ஒப்பிட்டுக் கேட்கிறீர்களா? ஸீரியஸ் கேள்வியா? குரல்வளையில் திரை மாதிரி இரண்டு சவ்வு உண்டு. காற்று வெளியேற்றப்படும்போது அவை அதிர்வதால் ஓலி உதிக்கிறது--வீணைத் தந்தி மீட்டப்பட்டதும் நாதம் ஜனிப்பது போல. ஸ்வீட் ரகசியம்: ஜேசுதாசின் குரல் வளையிலுள்ள திரையைவிட, எஸ்.ஜானகியின் குரல் வளையிலுள்ள திரை மெல்லியது, நீளம் குறைவானது.)

<><><><><><><><><><><><><><><><><><><><><>


கே: நீங்கள் படமெடுத்தால் என்ன ?

ப: எடுத்து என்ன பயன்? என் பல்லில் விஷம் இல்லையே.

<><><><><><><><><><><><><><><><><><><><><>

கே: எங்கள் பாட்டி சொர்கத்துக்குப் போனாளா அல்லது நரகத்துக்குப் போனாளா என்று எப்படித் தெரிந்து கொள்வது?

ப: உங்கள் பாட்டி எந்தத் திசையில் சென்று கொண்டிருந்தார் என்பது அவர் உயிரோடிருக்கும் போதே உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே?

<><><><><><><><><><><><><><><><><><><><><>

கே: எப்போதும் சோகமாக முடிவது ஏது?

ப: வாழ்க்கை.


<><><><><><><><><><><><><><><><><><><><><>

கே: வாழ்க்கை எப்போது கசக்கிறது?எப்போது இனிக்கிறது ?

ப: இளமை அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். நாலைந்து நண்பர்கள் நாங்கள். ஒருவர் தங்கக் கட்டி. அவரைக் கோட்டா பண்ணுவது, மற்றவர்களது அன்றாட பொழுது போக்கு. அவர் சிரிப்பு மிஷின். ஒன்றும் பொருட்படுத்தாமல் சிரித்துக்கொண்டே இருப்பார். நான் மற்றவர்கள் கலந்து கொள்ளும் கேலியில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருப்பேன். ஒரு நாள், அவரை நாமும் கிண்டல் செய்தால் என்ன என்று ஒரு ஆசை உண்டாயிற்று. சிரித்துக்கொண்டே ஏதோ சொல்லி வைத்தேன். பளிச்சென்று ஒரு பதிலடி கொடுத்தாரே பார்க்க வேண்டும். உலகத்து அசடெல்லாம் என் முகத்துக்கு வந்துவிட்டது. வாயில்லாப் பூச்சிகளிடம் கூட அனாவசியமாக வாயை கொடுக்கலாகாது என்று உபயோகமான தீர்மானத்துக்கு வர அன்றைய அனுபவம் எனக்குத் துணை செய்தது. குட்டுப்படும்போது வாழ்க்கை கசக்கிறது. பாடத்தைக் கற்றுக் கொண்டு அதன்படி நடக்கும்போது இனிக்கிறது.

Wednesday, February 3, 2010

மன அறை


முகம் தெரியாத முதியோர் கூட்டத்தில்

பத்தோடு பதினொன்றாய் இருந்து கொண்டு

பாசமாக இருப்பது போல் பேசி சிரித்து

பாசாங்கு செய்ய எனக்குத் தெரியாது.


எனக்குத் தெரிந்ததெல்லாம் என்னை

தன் அன்பால் குளிப்பாட்டிய

உன் அப்பாவும் அவர் மறைவுக்குப் பின்

நீயும் உன் குழந்தைகளும் தானேடா!


பெற்று வளர்த்து ஆளாக்கி உனக்கோர்

திசையைக் காட்டிய எனக்கு நீ காட்ட வேண்டுமா

முதியோர் இல்லத்துக்கான திசை?



அங்கே போனாலும் இந்தப் பாழும் மனசு

உன்னைத்தானேடா நினைத்திருக்கும்!



வீட்டு வேலைகளை தலையில் கட்டி

மனைவி என்னை சக்கையாக பிழிவதால்தான்

என்னை முதியோர் இல்லத்துக்கு அனுப்புவதாய்

நண்பனிடம் நீ போனில் பேசினதை

தற்செயலாய்க் கேட்ட போது

கருவறையில் உன்னை பத்து மாதம் சுமந்த எனக்கு

உன் மன அறையில் இடம் இருப்பது அறிந்து

மகிழ்ச்சிதான்.



அந்த நினைவுகளுடனே

அங்கே வாழ்ந்து முடிப்பேன் என் ஆயுளை!

வரட்டுமா என் ராசா?

-- ரேகா ராகவன்.

மகிழ்ச்சியோடு சுமந்தால் எத்தகைய பாரமும் இலகுவாயிருக்கும்